குரூப் 2 வினாத் தாளில் ஈ.வே.ரா.,வுக்கு சாதி அடையாளம் இடம் பெறக் காரணமானவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதற்காக, தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, இராஜாஜி, சி.என்.அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதன் சுருக்கமாக ஈ.வெ.ரா என்றும், அதுகூடத் தெரியாமல், ‘இ’ என்று பிழையாகப் போட்டுள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும், 1928ஆம் ஆண்டிலேயே தனது பெயரில் சாதி ஒட்டியிருந்ததை நீக்கிய அவர், யாரும் சாதிப்பட்டம் போடக்கூடாது, சாதிப்பெருமை பேசக்கூடாது என்று, சாதி மாநாடுகளிலேயே துணிச்சலாகப் பேசியவர் என மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். எப்போதும் எல்லா நிலையிலும் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றவருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத்தேர்வில் அடையாளப்படுத்துவதும் அயோக்கியத்தனமானது என்று சாடியுள்ளார்.