சித்திரை திருவிழா! சுசீந்திரம் தாணுமாலய சுவாமி தேரோட்டம்!

Published:

suseendram ther - 2026

சுசீந்திரம் தாணுமாலயஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு,  நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயஸ்வாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தெப்பத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு, தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9-ஆம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணிக்கு தட்டு வாகனங்களில் சுவாமி, அம்பாள், விநாயகர், அறம் வளர்த்த நாயகி அம்மாள் ஆகியோர் ரத வீதிகள் வழியாக உலா வந்து கோவிலை சென்றடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி வாகனங்கள் வெளியே வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பின்னர், 9.45க்கு சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளினர். விநாயகர் இன்னொரு தேரிலும், சப்பரத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் எழுந்தருளினார்கள்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

தொடர்ந்து குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, வட்டப்பள்ளிமடம் ஸ்தானிகர் சர்மா, தெற்குமண் மடம் திலீபன் நம்பூதிரி, கோவில் பணியாளர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோடும் வீதிகளில் பக்தர்களுக்கு பானகம், நீர் மோர் ஆகியவை பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி வந்த தேர் பகல் 11.50 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. மாலை சமயச் சொற்பொழிவு, நள்ளிரவு சப்தாவரண நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

10-ஆம் நாள் திருவிழாவான இன்று கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் சுவாமி அம்பாள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related articles

Recent articles

spot_img