சென்னை : வருவாய் ஈட்டும் அனைவரும் அபராதமின்றி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆக.31ம் தேதி இன்றே கடைசி நாள். வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டி வரும் என வருமான வரித்துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இருப்பினும், மேலும் ஒரு மாதத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப் படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2017 – 18க்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு முதல் மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமான வரி உச்ச வரம்பைத் தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருமான வரியைக் குறைப்பதற்காக வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உச்சவரம்புக்குக் கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது. இன்றைய தினத்துக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டி வரும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இன்றைக்குள் கட்டாதவர்களில் ரூ. 5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் உள்ளவர் என்றால் ரூ. 1,000 தாமத கட்டணமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்போர் ரூ.5,000 தாமத கட்டணமும் செலுத்தி, டிச.31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
வரும் 2019 ஜனவரி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள், ரூ.10 ஆயிரம் தாமத கட்டணம் செலுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். அதன் பின், 2017 – 18ம் ஆண்டுக்கான வருமான வரிகணக்கு தாக்கல் செய்ய முடியாது.
இந்த நிலையில், வருமான வரி அலுவலக கௌண்டர்களில் உள்ள நெருக்கடி மற்றும், கடைசி நேர நெருக்குதல்களைக் காரணம் காட்டியும், ஆன்லைனில் தாக்கல் செய்வோருக்கு இணையதளம் முடக்கம் காரணமாகவும் மேலும் தாமதமாகிறது என்றும், எனவே கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும் பயனாளிகள் கோரியுள்ளனர்.