“எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!” சொன்னவர்;ஸ்வாமிநாத ஆத்ரேயன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் (ஒரு பழைய போஸ்ட் புது மெருகுடன்) (எவ்வளவு முறை படித்தாலும் அலுக்காத ரசமான கட்டுரை) கோஸ்வாமி துளஸீதாஸர் தசரதரைப் பற்றி ஒரு ரஸமான செய்தி கூறுகிறார்; தசரதருடைய முற்பிறவியில் அவர் ஸ்வாயம்புவ மனு. அவர் முன் நாராயணன் தோன்றி அடுத்த பிறவியில் அவருக்குத் தாமே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்களித்தார். அப்பொழுது ஸ்வாயம்புவ மனு ஒரு வரம் கேட்டார்; “ஸ்வாமி.! என்னை யாராவது பைத்தியக்காரன் என்று சொன்னால் சொல்லட்டும். ஆனாலும் தாங்கள் எனக்குப் பிள்ளையாகப் பிறக்கும் போது ஒரு தகப்பனுக்கு ஒரு பிள்ளையிடம் எவ்வித அன்பு இருக்கவேண்டிமோ, அது மட்டும் இருக்கட்டும். “அப்படியே.!” என்று நாராயணனும் அருள் புரிந்தார். ராமனைப் புத்திரனாகப் பெற்ற தசரதர் அவரிடம் எவ்வளவு பாசம் கொண்டிருந்தார்; பிள்ளையின் பிரிவு தாங்காமல் எப்படிப் பிராணனை விட்டார் என்பது தெரிந்த விஷயம். காஞ்சி காமகோடி பீடம் பரமாசார்யாளிடம் பரம பக்தியும் பிள்ளைப் பாசமும் ஒருங்கே பெற்ற பெருமை எசையனூர்ப் பாட்டிக்கு உண்டு. எசையனூர்ப் பாட்டி என்ற கோகிலாம்பாள் அம்மாள் தென்னார்க்காடு மாவட்டத்தில் எசையனூர் என்ற கிராமத்தில் செல்வம் நிறைந்த குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டு, இளமையில் கணவரையும், குழந்தைகளையும் இழந்தவள்.ஞானபக்தி, வைராக்யங்கள் அவளிடம் அடங்கின. பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள். ‘பரமாசார்யாள் ஞானி,தெய்வ புருஷர்’ என்ற மரியாதையும் பக்தியும் ஒரு புறம், கொள்ளை அன்பும்,பாசமும், பரிவும் மறு புறம். பாசத்தோடு,அக்கறையும் இணைந்து அதட்டி உருட்டத்- தயங்க மாட்டாள், பாட்டி.அது ஒரு சிறப்புச் சலுகை. …………………………………………………………………………………………. “ஏண்டா ராமமூர்த்தி, பெரியவா இன்னிக்குச் ..சரியா பிட்சை பண்ணினாளோடா? ஏன் தான் ..இந்த ஏகாதசி,துவாதசி,ப்ரதோஷம் சேர்ந்தாப் ..போல வரதோ.? தசமி ஆரம்பிச்சு நாலு நாளைக்குப் …பட்டினியா.?இப்படிக் காய்ஞ்சா, அந்த …உடம்பு என்னத்துக்கடா ஆகும்,?” “மேலூர் மாமா,! நான் சொல்றதைக் கொஞ்சம் ..கேளுங்கோளேன். நீங்க சொன்னாத்தான் ..பெரியவா கேட்பா,! இப்படிப் பாறைமாதிரி ..கபம் கட்டிண்டிருக்கே,? இருமக்கூட முடியாமல் ..தவிக்கிறாளே,? வென்னீரில் ஸ்நானம் ..பண்ணச் சொல்லுங்களேன்.” “ஏண்டா, விச்வநாதா, பெரியவா கொஞ்ச நேரம் ..தூங்கட்டுமேடா.! எதற்கடா பேச்சுக் ..கொடுத்திண்டிருக்கேள். “இல்லே, பாட்டி.! பெரியவா பேசறா, நாங்க கேட்டுண்டிருக்கோம். -இப்படி, எல்லோரிடமும் பேசுவதற்குத் தனி உரிமை, பாட்டிக்கு. “ஏண்டாப்பா,! நைவேத்ய கட்டிலே இத்தனை பேர் ..இருக்கேளே,? பெரியவாளை ஸ்நானத்துக்குக் …கூப்பிடுங்களேன். காலா காலத்திலே பூஜை …செய்து பிட்சை பண்ணட்டுமே.?” சவாரிக்காரர்களிடம் போவாள். “நீங்கள் எல்லோரும் புண்யாத்மாக்கள். ..நன்னா இருங்கோ.! இந்தாங்கோ.! கொஞ்சம் ..பட்சணம் கொண்டு வந்திருக்கேன். ..எல்லாருமாச் சாப்பிடுங்கோ.! ..(டின் நிறைய பட்சணம்) பாவம் உங்களுக்கு ..நேரம் காலமே கிடையாது.
- அதுதான் (டின் நிறைய) பாட்டி நோக்கில்,கொஞ்சம்.!
“பெரியவா எப்ப கிளம்பறாளோ.? ..தயாரா இருக்கணும். வழியிலே ..ஜாக்ரதையாப் பார்த்துக் கொள்ளுங்கோ.!” “இருட்டிலே கண்ட இடத்திலே மரத்தடியில் ..படுத்துக்கறேன்னு ஆரம்பிச்சுடுவா பெரியவா. ..தீவட்டியை எடுத்துண்டு நாலு பக்கமும் ..சுத்திவரப் பாருங்கோ.பாம்பு,பல்லி ..இருக்கப்போறது. கவனமா இருங்கோடாப்பா.! ..உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு” என்பாள். ……………………………………………………………………………………… புதுப் பெரியவர்கள் பீடத்திற்கு வந்த பிறகு பாட்டிக்கு ஒரு அலாதித் தெம்பு. அவர்களிடம் பரமாசார்யாளைப் பற்றி, தான்படும் கவலையெல்லாம் மனம் விட்டுக்கொட்டுவாள். அவர்களும் அவளுடைய அளப்பரிய பக்தியை நினைத்துக் கண்ணீர் மல்கச் சிரித்துக் கொண்டே கேட்பார்கள். ……………………………………………………………………………………………….. பரமாசார்யாளுடன் காசி யாத்திரை சென்றிருந்த பாட்டி சொல்லுவாள்; “நான் சொல்றதை நன்னாக் கேட்டுக்கோ.!.. (ஒரு மானசிகக் காட்சியை விவரிக்கிறாள்.) “பெரியவா அப்படியே தண்டத்தைத் தோளோடு அணைச்சுண்டு உட்கார்ந்திண்டு கண்ணை மூடிக்கிறா. திடீர்னு சந்திரக் கலை தெரியறது. கங்கை தெரியறாள். ஜடை தெரியறது. பளபளன்னு நெத்தி.சாந்தமாகச் சிரிச்ச முகம்.அப்படியே தேவேந்திரன் தங்கத் தாமரைகளாகக் கொண்டு வந்து தலைலே கொட்டறான். நான் கண்ணாலே பார்த்தேன்.! எல்லாரும் சொல்றா, மாளவ்யா புஷ்பாபிஷேகம் பண்ணினார்னு.” (பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஸ்தாபகர், பண்டிட் மதன் மோகன் மாளவ்யா,மகாசுவாமிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமாக மலர்களைப் பொழிந்து அபிஷேகம் செய்ததை அந்தக்கால பக்தர்கள் வெகுவாகப் பாராட்டியதை எசையனூர் பாட்டியும் அறிந்திருந்தார்.) …………………………………………………………………………………………………….. பழைய மானேஜர் விச்வநாத அய்யர் சொல்வார், “பெரியவா பூஜை செய்யற அம்பாளே எசையனூர்ப் பாட்டியாக வந்து கண்காணிக்கிறாள்” என்று.!. “நிர்வாகத்திலே குற்றம் குறை இருந்தால் என்கிட்ட சொல்லுங்கோ.!” என்று பாட்டியைப் பணிவுடன் கேட்பார், மடத்து மானேஜர்.! மடத்துச் சிப்பந்திகள் அனைவரிடமும் பாட்டிக்குப் பிள்ளைப் பாசம். அவர்களுக்குப் பல வித உபகாரம் செய்வாள்,பணத்தால் ஆக முடியாத ஊறுகாய்,பட்சணம் என்று பல உபசாரங்களைப் பரிவோடு செய்வாள். (அந்தக் காலத்தில் இவைகள் விற்பனைக்கு வரவில்லை.) “எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!” என்று பரமாசார்யாளே தமக்குப் பணிவிடை செய்பவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே எச்சரிப்பார்களாம். பரமாசார்யாள் மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாம் இட்டிருந்தார்கள்.அப்பொழுது, “எசையனூர்ப் பாட்டியை மாடு முட்டி விட்டது காலமானாள்.” என்ற செய்தி வந்தது. மகாஸ்வாமிகள் மூன்று நாட்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்கள். எசையனூர்ப் பாட்டிக்கு, இனி ஒருபோதும் இந்த மண்ணுலகில் வேலையில்லை;ப்ரும்ம லோகத்திலும், மகாப்பெரியவாளையே ஸ்மரித்துக் கொண்டிருப்பாளோ?