சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நேரத்தில் மீனவர் பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இப் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் – தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் உடனடி நடவடிக்கையாக இருக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு. இந்தியப் பிரதமர் இலங்கை சென்று வந்த பிறகும் இதற்கு தீர்வு கிட்டப்படும் என்று எதிர்பார்த்ததற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் தமிழத்தைச் சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் மீனவர்களின் வருமானத்தில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறது. மீனவர்கள் வாழ்வாதாரம் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை மத்திய அரசுக்கு, தமிழக அரசு எடுத்துரைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை கண்டிப்பதோடு, ஒரு தீர்க்கமான நல்ல முடிவு தமிழக மீனவர்களுக்கு கிடைக்க வழி வகுக்க வேண்டும். ஏற்கனவே 2 முறை மீனவப் பிரதிநிதிகளோடு நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு 3 ஆவது முறையாக நடக்க இருந்த பேச்சு வார்த்தை இன்று 24-03-2015 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. எனவே இன்று நடைபெறும் மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெறுவதற்கு ஏதுவாக, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களது படகுகளையும் உடனடியாக இன்றைக்குள் விடுவிக்க வேண்டும். மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே நடக்கின்ற பேச்சு வார்த்தையும் நல்ல முறையில் நடந்து அனைத்து மீனவர்கள் வாழ்விலும் ஒளி தீபம் ஏற்றிட வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை அரசால் பிரச்சனைகள் இன்றி தொடர ஒரு நிரந்தர, சுமூக, நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
Popular Categories