
தென்காசி மக்களின் நீண்ட நாள் கனவான தென்காசி தனிமாவட்டம் அமைக்கும் கோரிக்கை இருந்து வந்தது.
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சமீபத்தில் அறிவித்தார்.
இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாகிவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மற்ற அரசு அலுவலகங்கள் எங்கே அமைப்பது? என்பது குறித்து அரசு உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
இதனையடுத்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் தனி அதிகாரியாக அருண் சுந்தர் தயாளன் நியமனம் செய்யப்பட்டார்.
அவரது தலைமையில் பொதுமக்களிடம் நெல்லை மற்றும் குற்றாலத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனை தொடா்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் ஏற்கனவே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கலாம் என தென்காசி சட்டமன்ற உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் வேறு எங்கு அமைக்கலாம்? என 15 இடங்களை வருவாய்த்துறையினர் தேர்வு செய்து வைத்திருந்தனர்.
அப்படி வருவாய் துறையினா் தேர்வு செய்த இடங்களையும் மற்ற இடங்களிலும் அரசு உயர்அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் காலையில் இருந்து மதியம் வரை இந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவா் ஷில்பாபிரபாகர்சதீஷ் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
மேலும் இந்த உயர்மட்ட அதிகாரிகள் குழு செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர், கொடிக்குறிச்சி, ஆய்க்குடி, பாட்டாகுறிச்சி, ஆயிரப்பேரி ஆகிய அனைத்து இடங்களையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வருவாய்த்துறையினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க இடங்களை தேர்வு செய்து அதன் வரைபடங்களையும் கொடுத்தனர்.
இந்த இடங்களை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம்.
மேலும் ஆய்க்குடியில் 20 ஏக்கர் பரப்பளவு நிலத்தை தனியார் ஒருவர் அரசுக்கு இலவசமாக தருவதாக கூறியுள்ளார்.
ஆயிரப்பேரி பகுதியில் ஒரே இடம்தான் அரசுக்கு சொந்தமாக உள்ளது.
இவை அனைத்தையும் ஆய்வு செய்தோம்.
இதுகுறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்போம். இதுகுறித்து அரசு முடிவு செய்யும் என்றார்.