திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டரை மிளகாய் பொடி தூவி தாக்கி கொலை செய்ய முயற்சி நடந்தது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை கலெக்டராக கே.எஸ்.கந்தசாமி கடந்த 31ம் தேதி புதிதாக
பொறுப்பேற்றார்.
இவர் நேற்று மதியம் 2 மணியளவில் அலுவலக பணிகளை முடித்துவிட்டு அலுவலகம் எதிரே
உள்ள கலெக்டர் பங்களாவுக்கு மதிய உணவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவருடன் நேர்முக எழுத்தர் பாபு, டபேதார் ஆகியோரும் பின்னால் சென்றனர்.
கலெக்டர் பங்களா கேட் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து ஒரே பைக்கில் வந்த
3 பேர், கலெக்டர் அருகே நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றி அவரை திடீரென தாக்கினர்.
இதனால், கலெக்டர் தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அவரை காப்பாற்ற ஓடி வந்த நேர்முக உதவியாளர் பாபு கூச்சலிட்டார்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பங்களா பணியாளர்கள் ஓடி
வந்தனர்.
அவர்களை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசாரும்,
பணியாளர்களும் துரத்திச் சென்று பிடித்தனர்.
பின்னர், 3 பேரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் இருந்து கத்தி, மிளகாய்பொடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பைக் திருட்டு பைக் என்பதும், போலி
பதிவு எண் பயன்படுத்தியதும் தெரிய வந்தது. மேலும் பிடிபட்ட 3 பேரும் போதையில்
இருந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகை கிராமத்தை
சேர்ந்த செல்வராஜ் மகன்கள் சிவா(29), மணிகண்டன்(31) என்றும் மற்றொருவர்
திருப்போரூர் அடுத்த தாழம்பூரை சேர்ந்த சந்திரபாபு மகன் சந்தோஷ்(27) என்பதும்,
இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
விழுப்புரத்தில் உறவினர் வீட்டுக்கு வந்ததாகவும், திருவண்ணா மலையில் உள்ள ஒரு
பாரில் மது குடித்தபோது அங்கு ஒருவரிடம் தகராறு ஏற்பட்டதாகவும், அவரை கொலை
செய்ய திட்டமிட்டு, பின்தொடர்ந்து வந்தபோது அதே கலர் சட்டையை அணிந்து
இருந்ததால் ஆள்மாறாட்டத்தில் கலெக்டரை கொலை செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளனர்.
ஆனாலும், கலெக்டர் பங்களாவுக்குள் போலீஸ் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்து கொலை
செய்ய முயன்று இருப்பதால் இது ஆள்மாறாட்டத்தால் நடந்த குழப்பம் இல்லை என்ற
சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, 3 பேரையும் போலீஸ் பாதுகாப்பில் வைத்து எதற்காக
கலெக்டரை கொல்ல முயன்றனர்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க ஏஎஸ்பி ரவளிப்பிரியா, ஏடிஎஸ்பி ரங்கநாதன், டிஎஸ்பி
தேவநாதன் ஆகியோர் கொண்ட குழுவை எஸ்.பி.பொன்னி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எஸ்பி பொன்னியிடம் கேட்டபோது, ‘ஆள் மாறாட்டத்தில் இந்த சம்பவம்
நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
ஆனாலும் உண்மை என்னவென்று அறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று
தெரிவித்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே, புதிய கலெக்டர் பொறுப்பேற்று 15 நாட்களில்
நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும்
ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கலெக்டருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்தி… சாமுராய்