அமெரிக்காவில் இந்திய என்ஜினியர் ஒருவர் மர்மநபரால் சுட்டுக்கொல்லாப்பட்டுள்ளார். பாரில் மது அருந்திக் கொண்டிருந்தபோது எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கூறியபடி அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
கார்மின் நகரில் விமான போக்கு வரத்து பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா. 32 வயதான இவர் தனது நண்பர் அலோக் மடசனி என்பவருடன் கன்சாஸ் நகரில் உள்ள பாருக்கு கடந்த புதன் கிழமை சென்றுள்ளார்.
இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கூறியப்படி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஸ்ரீனிவாச குச்சிபோட்லா மற்றும் அவரது நண்பர் அலோக் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சேர்க்ப்பட்டனர். இந்நிலையில் ஸ்ரீனிவாஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். அப்போது கிளின்டன் என்ற பாரில் அவர் மது அருந்தியதும் அங்கிருந்த பார் டென்டரிடம் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 2 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பார் டென்டர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அந்த நபர் ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் ஆடம் புரின்டன் என்பதும் தெரிய வந்துள்ளது. இஸ்லாமியர்கள் என நினைத்து அவர் இந்தியர்கள் 2 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.