லாகூர்:
பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைத் தெரிவித்த பெண்ணுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ரஜன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷுமைலா (19) என்பவருக்கு, அவரது உறவினர் கலீல் அகமது என்பவருடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது ஆனால் ஒரு கட்டத்தில், கலீல் அகமது தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு வந்தபோது, பஞ்சாயத்து செய்த பெரியவர்கள் ஷுமைலாவின் புகாரை ஏற்க மறுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷுமைலா அந்தக் கிராமத்தில் இருந்து தப்பி, போலீஸ் உதவியை நாடினார். ‘‘நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கலீல் அகமது துப்பாக்கி முனையில் என்னை பலாத்காரம் செய்ததால், என்னால் கூச்சலிட முடியவில்லை. ஆனால் பஞ்சாயத்தாரோ, நான் விரும்பித்தான் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மரண தண்டனை வழங்கி உள்ளனர்’’ என்று புகார் செய்தார்.
இதை அடுத்து, போலீசார் பஞ்சாயத்தார் மீது வழக்குப் பதிவு செய்து, ஷுமைலாவை அரசு மகளிர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.