சமீபநாட்களாக பெண்கள் படிக்கும் வயதில் வகுப்பறையில்,பள்ளி சீருடை யில் பஸ்சில் பயணம் செய்யும்போது மது குடிக்கும் கலாச்சாரம் நிகழ்வது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் வகுப்பறை யில் மதுபானம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறையில் உள்ள மேஜை மேல் அமர்ந்துகொண்டு வெளிமாநில பாக்கெட் மதுபானத்தை குளிர்பானத்தில் கலந்து அருந்தியுள்ளனர். இதனை மாணவிகள் தங்களது மொபைல்களில் வீடியோவும் எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த வீடியோ சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை தொடர்ந்து, கல்லூரி மாணவிகளிடன் விசாரணை செய்ததில், அதே வகுப்பறையில் மாணவிகளுடன் படிக்கும் மாணவன் ஒருவன் மதுபானத்தை வாங்கி வந்ததாகவும், மது என்று தெரிந்தே அருந்தியதாகவும் மாணவிகள் ஒப்புக்கொண்டனர்.
இதை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்காலிக இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து இனி இது போல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் எச்சரித்து அனுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது . படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.