ஆளுநர் இனி எங்காவது ஆய்வுக்கு செல்லட்டும்… நானே போய் கருப்புக் கொடி காட்டுவேன் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரூரில் நடைபெற்ற திமுக., மாணவர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கட்சி தொடங்குவதற்கு முன்பே தானே தலைவர் என சொல்லிக் கொண்டிருப்பவர்களை விமர்சிக்க நான் தயாராக இல்லை.
ஆளுநர் இனி எங்கு ஆய்வுக்குச் சென்றாலும், நானே கருப்புக் கொடி காட்டப்போகிறேன். 7 ஆண்டு சிறை என்ற மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சி ஒடுங்கப் போவதில்லை… என்று கூறினார் ஸ்டாலின்.
ஆளுநரின் ஆய்வுகள் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஆளுநரை செயல்பட விடாமல் தடுக்கும் விதமாகவும் செயல்படுபவர்களை ஏழு ஆண்டு சிறையில் தள்ளும் வகையில் சட்டத்தில் வழி வகை இருப்பதாக ஆளுநர் மாளிகை அண்மையில் தெரிவித்திருந்தது.
முன்னதாக நாமக்கல்லில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக.,வினர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் வைக்கப்பட்டனர்.