புது தில்லி:
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிராணி நல சங்கத்தினர் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். அவ்வாறு வழக்கு தொடரப்பட்டாலோ, அல்லது இடைக்காலத் தடை கோரினாலோ, அதன் மீது முடிவெடுக்க, தமிழக அரசின் தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும். தமிழக அரசை விசாரிக்காமல் எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து கடந்த 7ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பு வழக்குத் தொடர திட்டமிட்டிருக்கிறது. இதனால், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.