கல்வான் பகுதிக்கு சம்மந்தமே இல்லாமல் உரிமை கொண்டாடி அத்துமீறி பள்ளத்தாக்குப் பகுதிக்கு ரோந்து வந்த சீனாவால் சென்ற மாதம் 15 ந்தேதி தகராறு ஏற்பட்டு சண்டையில் நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் எய்தினார்கள்.
பதிலுக்கு பதில் இரவோடு இரவாக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை குறித்த முடிவு காரணமாக ஆஜானுபாவன்களான கட்டாக் வீரர்கள் களம் இறக்கப்பட்டு சீன வீரர்களை நைய புடைத்ததில் நாற்பதுக்கும் மேற்பட்ட சீன வீரர்கள் மடிந்தனர், நூற்றுக்கணக்கான சீனவீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
பாதிப்புகள் குறித்த முழு விபரங்களையும் இன்று வரை மறைத்து வரும் சீனா இந்தியாவை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. பேச்சு வார்த்தையும் வழக்கம் போல பலனில்லாமல் இருந்ததை அடுத்து இந்தியா சீனாவின் பொருள்களை பகிஷ்கரிக்கும் முடிவை மறைமுகமாக அறிவித்தது.
பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உள்நாட்டுப் பொருள்களை வாங்க உற்சாகப்படுத்தினர். ஏற்கனவே கொரோனா பிரச்சினைகளால் இந்தியாவில் சீன வணிகம் தடைபட்டிருந்த நிலையில் இந்திய தலைவர்களின் அறிவிப்பு அந்த நாட்டுக்கு ஒரு இடியாக அமைந்தது.
அடுத்து சீனாவின் 59 ஆப்களுக்கு இந்தியா தடைவிதித்தது அந்த நாட்டுக்கு பேரிடியாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்பு லே பள்ளத்தாக்குக்கு சென்று இராணுவ வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி ”எல்லை விரிவாக்கம் காலம் கடந்த வழக்கம் என்றும் இது 2020 ஆம் ஆண்டில் எடுபடாது” என்று கூறினார். மேலும் “இதே எண்ணத்துடன் நடவடிக்கைகள் தொடருமானால் கசப்பான தோல்வி உறுதி” என மறைமுகமாக சீனாவை எச்சரித்தார்.
அதன்பிறகுதான் பேச்சுவார்த்தையில் சீனா மெதுவாக இறங்கி வர தொடங்கியதாக செய்திகள் கூறுகின்றன. நேற்றைய முன்தினம் அஜித்தோவல் மற்றும் வெளியுறவுத்துறை சீனியர் அதிகாரி மூலம் தொலைபேசியில் சீனாவுடன் காரசாரமாக பேசியதை அடுத்து சீனா இந்தியாவின் முக்கிய வலியுறுத்தலான கல்வானின் ரோந்து புள்ளி 14′ லிருந்து 15 – ஐ நோக்கி நேற்று மதியம் முதல் பின்னோக்கி நகரத் தொடங்கின.
நேற்று மாலை நேர நிலவரப்படி சீன இராணுவம் அதன் போர் வாகனங்கள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தையும் ரோந்து புள்ளி 14’இலிருந்து முழுமையாக அகற்றியது. முன்னதாக ரோந்து புள்ளி 14 ‘லிருந்து சீன ராணுவம் பின்வாங்கியிருந்தாலும் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக சீன இராணுவத்தால் நிறுத்தப்பட்ட புல்டோசர்கள், போர் வாகனங்கள் உள்ளிட்டவை அங்கேயே இருந்ததாக கூறப்பட்டது.
அவற்றையும் ரோந்துப் புள்ளி 17 ஐயும் காலி செய்ய தில்லியில் இருந்து உத்தரவுகள் போனில் பெய்ஜிங்குக்கு பறந்து கொண்டே இருந்தன. அதற்கு கொஞ்சம் அவகாசத்தை சீனா வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து ரோந்து புள்ளி 17’இல் கூட சீனா தனது இருப்பைக் குறைத்துள்ளது. சீன கூடாரங்கள் மற்றும் புல்டோசர்கள் அகற்றப்பட்டுள்ளன.
அடுத்த 2-3 நாட்களில் சீனா கால்வானில் இருந்து பின்வாங்குவதாகவும், 2020 ஏப்ரலில் அது வகித்த நிலைக்குத் திரும்பும் என்றும் கூறப்படுகிறது.ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ரோந்துப் புள்ளி 15 ஐயும் காலி செய்யவேண்டும் என கடுமையாகக் கூறியுள்ளது.
நேற்று ரோந்து புள்ளி 14 ‘லிருந்த 20 கூடாரங்களையும் 100 முதல் 200 துருப்புக்களையும் ரோந்து புள்ளி 15’க்கு நகர்த்தியுள்ளது. சீன தரப்பு தனது காலாட்படைக்குச் சொந்தமான போர் வாகனம் மற்றும் பீரங்கி துப்பாக்கிகளை கூட நகர்த்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் உலகில் யாருக்கும் மசியாத சீனா முதன் முதலாக இந்தியாவிடம் தன் தலையை தாழ்த்தியுள்ளது. சீனா இன்னும் பல படிகள் பின்னேரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்
நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில்’ ஞாயிற்றுக்கிழமை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு மந்திரி வாங் யியுடன் தொலைபேசியில் பேசினார் என்றும், சமாதானத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளிலிருந்து துருப்புக்களை விரைவாக, முழுமையாக வெளியேற்றுவதை உறுதிசெய்வது அவசியம் என்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சீனாவின் பேச்சைக் கேட்டு தஞ்சாவூர் பொம்மை போல ஆடிய நேபாள கம்யூனிஸ்டுகளின் தலைவரும் பிரதமருமான ஒலி ஷர்மா சில வாரங்களுக்கு முன்பாக பித்தோராகர் மாவட்டத்தின் கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பகுதிகள் நேபாள பிரதேசங்கள் என்று அறிவித்தார்.
மேலும் நேபாள நாடாளுமன்றம் அதில் உள்ள மூன்று பகுதிகளைக் காட்டும் புதிய வரைபடத்தையும் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றியது. இதை அடுத்து நேபாளம் அந்த பகுதிகளில் ஆறு புதிய எல்லை புறக்காவல் நிலையங்களை அமைத்து தன ஆயுத காவல் படைகளை நிறுத்தியது.
ஆனால் அந்த ஆறு புதிய எல்லை புறக்காவல் நிலையங்களையும் நேற்று திரும்பப் பெற்றதாக மாநில அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது இந்தியாவுக்கு எதிரான தோரணையால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதன் எதிரொலியாக இது நடந்திருக்கலாம் என்று நேபாள அதிகாரிகள் கூறினர். என்றாலும் சீனா படும் பாட்டைப் பார்த்துதான் நேபாளம் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து நேபாள பத்திரிகை ஓன்று கூறுகையில் “சீன ஆதரவுடன் நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்ததால் அதிருப்தியடைந்த இந்தியாவால் நேபாள கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, சர்மா ஒலியை பதவிலியிருந்து தூக்க முற்படுகின்றனர். இந்த நிலையில், நேபாளம் அடாவடியாக அமைத்த எல்லை புறக்காவல் நிலையங்களை திரும்பப் பெறுவதன் மூலம் ஒலி, இந்தியாவை சமாதானப்படுத்தி பதவியில் தொடர விரும்புகிறார் என கூறியுள்ளது.