பக்தர்களின் ‘காவலர்’ ஜனவரி 27,2015,தினமலர். ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த கணவன், மனைவி விழா காண வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்ததால், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர். ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து விட்டான். பெருமாளைத் தரிசிக்க வந்த இடத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதை எண்ணி அந்த தம்பதியரின் மனம் மிகவும் நொந்தது. அவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து மகாபெரியவரைத் தரிசித்தால், தங்களுக்கு தீர்வு கிடைக்குமென நம்பி வந்தனர். பெரியவரைத் தரிசிக்க பெரிய கூட்டம் வரிசையில் நின்றது. தம்பதிகளும் வரிசையில் இணைந்து கொண்டனர். அந்த பெண்ணின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. வரிசையில் வந்தவர்கள் சுவாமியை வணங்கி விட்டு, நகர்ந்து கொண்டே இருக்க, அந்தப் பெண்ணைக் கவனித்த பெரியவர் அவரை அழைத்து, “”ஏன் அழுகிறாய்?” என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார். முக்காலமும் உணர்ந்த அந்த நடமாடும் தெய்வத்திற்கா இந்த சம்பவம் தெரியாமல் போயிருக்கும்! இருப்பினும், பெண்ணிடம் அந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தார்கள். அந்தப் பெண் நடந்த விபரங்களை ஒன்று விடாமல் சொன்னார். உடனே பெரியவர் அவரிடம்,””மடத்துக்கு எதிரே இருக்கிற கங்கைகொண்டான் மண்டபத்தில் தெற்கு நோக்கி ஒரு ஆஞ்சநேயரும், ஏகாம்பரநாதர் கோயில் மண்டபத்தில் மேற்கு நோக்கி தூணில் எழுந்தருளியிருக்கும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் தரிசிக்கச் செல். அந்த ஆஞ்சநேயர்களை 21 தடவை பிரதட்சணம்(வலம்) செய். பிறகு வீட்டிற்கு போ,” என்றார். அந்தப் பெண்,””போலீசில் புகார் கொடுக்க வேண்டாமா?” என்று கேட்டார். “”வேண்டாம்…வேண்டாம்…நீ பிரார்த்தனை முடிச்சுட்டு வீட்டுக்குப் போ,” என்றார் பெரியவர். பெரியவர் சொன்னபடி, அந்த அம்மையாரும் அவரது கணவரும் ஆஞ்சநேயர்களைத் தரிசித்த பிறகு பஸ்ஸ்டாண்ட் சென்றனர். அப்போது இவர்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்கள், “”மாமி..மாமி…உங்களைத் தான் தேடிக் கொண்டு இருந்தோம். உங்கள் செயினைப் பறித்தவனை போலீஸ் பிடிச்சு நகையை கைப்பற்றிட்டாங்க. நீங்க ஸ்டேஷனுக்குப் போய் அடையாளம் சொல்லி வாங்கிக்கலாம்,” என்றனர். அவர்களும் ஸ்டேஷனுக்குச் சென்று பொருளைப் பெற்ற பிறகு, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்கள். கடவுளின் அருள் வேண்டுமானால், குரு பாதை காட்ட வேண்டும். காஞ்சி மகாபெரியவரை நமது குருவாக ஏற்று வேண்டுதல்களை வைத்து விட்டால் போதும்! நமது கோரிக்கைகள் உரிய தெய்வங்களின் உதவியுடன் நிறைவேறி விடும். காஞ்சிபுரம் சென்றால், இனி நீங்களும் இந்த ஆஞ்சநேயர்களிடம் உங்கள் வேண்டுதலை வைத்து வரலாம்
To Read this news article in other Bharathiya Languages
பக்தர்களின் ‘காவலர்’
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari