சென்னை வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஆலயம்மாள் (72). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 4 மகன்கள் உள்ளனர்.
குடும்ப சொத்தான 9 சென்ட் பட்டா நிலத்தில் தனது பங்கை பிரித்து தரும்படி அவரது மூத்த மகன் பூபதி தொடர்ந்து கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூபதி, மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு சென்றார்.
அங்கு தனது தாயிடம், சொத்தில் தனது பங்கை பிரித்து தரும்படி தகராறு செய்தார். அதற்கு, 4 மகன்களுக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும். அதற்காக, அதிகாரிகளிடம் மனு கொடுத்து அலைந்து திரிகிறேன் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பூபதி, கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆலயம்மாளின் வயிறு, கழுத்து, முகம் உள்பட உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார்
இதில், படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதை கண்டதும், பூபதி அங்கிருந்து தப்பிவிட்டார்.
தகவலறிந்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆலயம்மாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பூபதியை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்