![இடி தாக்கி விவசாயி பரிதாப மரணம்! 1 idi minnal](https://dhinasari.com/wp-content/uploads/2020/04/idi-minnal.jpg)
கடந்த சில நாட்களாக மக்களை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதே போல, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், மாதர்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்த நிலையில், பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
![இடி தாக்கி விவசாயி பரிதாப மரணம்! 2 idi](https://dhinasari.com/wp-content/uploads/2020/04/idi.jpg)
இந்நிலையில் மாதர்பாக்கத்தில் ஒரு விவசாயி இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாதர்பாக்கம் அடுத்த நேமலூர் பகுதியில் வசித்து வந்த சந்திரன் என்பவர், வீட்டுக்கு வெளியே மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் மழையில் நனைந்து விடாமல் இருக்க, அதனை மூடச்சென்றுள்ளார். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்ததால், சந்திரனை இடி தாக்கியுள்ளது. அதில் சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.