கொரோனா பரவல் குறித்து இப்போது பல வகைகளிலும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. கண்ட இடங்களில் எச்சில் துப்பாதீர்கள், தரையில் எச்சில் துப்பப் பட்டிருந்தால் அதை மிதிக்காதீர்கள்; பொது இடங்களில் கையால் எதையும் தொடாதீர்கள்; வீட்டுக்குள் வந்ததும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுங்கள், கால்களையும் கழுவி, உடைகளை தனியே எடுத்து வையுங்கள் என்றெல்லாம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.
மேலும், கடைகளில் விலகி இருங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள் என்று கூறி அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கடைகளுக்குச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அத்தியாவசிய சேவை என்று இல்லாத நிலையிலும், சவரம் செய்ய சலூன் கடைக்குச் சென்று ஆறு பேர் கொரோனாவை வாங்கி வந்துள்ளது மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்ற நோயின் சமூகப் பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கிறது.
மத்தியப் பிரதேச கிராமம் ஒன்றில், ஒரே பிளேடு மற்றும் ஒரே துணியைப் பயன்படுத்தி சவரம் செய்ததால், 6 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாம். சலூன் கடைக்காரரின் அஜாக்கிரதையால் இவ்வாறு நிகழ்ந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
ம.பி.யின் பார்கோன் என்ற கிராமத்தில் சலூன் கடைக்காரர் ஒருவர், ஒரே துணியை போர்த்தி, வந்த நபருக்கு தண்ணீர் விட்டு குளுரக் குளுர வைத்து, முடி திருத்தி, சவரம் செய்திருக்கிறார். வந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. இப்போது அதன் மூலம் 6 பேருக்கு கொரோனா தொற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த 6 பேருக்கு மட்டுமல்ல. இன்னும் பலருக்கும் அதே துணியைப் பயன்படுத்தித்தான் அந்த சலூன் கடைக்காரர் சவரம் செய்துள்ளார். இதுவரை 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இவ்வாறு தகவல் வெளியான உடனேயே சம்பந்தப்பட்ட பார்கோன் கிராமம் முழுவதுமே அதிரடியாக ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், இந்த கிராமத்தில் கொரோனா அறிகுறி உள்ளதாகக் கருதப்படும் 34 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். பார்கோன் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சவரம் செய்யச் சென்று கொரோனாவுடன் திரும்பி வந்த நபர்கள் குறித்த செய்தியால், மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது. இதனால் இது போன்ற சவரம் செய்ய தற்போதைய சூழலில் சலூன் கடைகள் பக்கம் போவதைத் தவிர்க்குமாறு கிராமங்களில் அறிவுறுத்தி வருகின்றனர்.