சென்னை:
அரசியலில் ஈடுபடும் மாணவர்கள், ஐஐடி., வளாகத்தில் இருந்து வெளியேறி விடுங்கள், ஐஐடியின் தன்மையை கலைக்காதீர்கள் என்று தில்லி ஐஐடி அலுமினி தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
தில்லி ஐஐடி., அலுமினி அசோஷியேஷன் தலைவர் பிரபாத் குமார், எழுதியுள்ள கடிதத்தில், ஐஐடி வளாகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதத்தில் குறிப்பிட்டவை:
அண்மைக்காலமாக சென்னை ஐஐடி.,யில் நிகழ்ந்து வருபவை கண்டனத்துக்குரியவை. நாட்டுக்கு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் விரும்பினால், அவர்கள் ஐஐடி வளாகத்தில் அரசியல் கருத்து ரீதியான திணிப்பு நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் மாட்டிறைச்சித் திருவிழா நடத்தியிருப்பதும், அடுத்து மற்ற மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியிருப்பதும் தவறானது. மாணவர்கள் அரசியலில் ஈடுபட விரும்பினால், அவர்கள் ஐஐடி., வளாகத்தை விட்டு வெளியேறவேண்டும். ஐஐடியன்கள், தேசத்தின் சொத்து. அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி ரீதியாக எல்லைகளைக் கடந்து நாட்டுக்கு தொண்டாற்றவும், சமூகத்தில் இணக்கமும் அமைதியும் நிலவ பணியாற்ற வேண்டும்.
தில்லி ஐஐடி அலும்னி அசோஷியன் சார்பாக, ஐஐடியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள், நாலாந்தர கேடுகெட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், கனவுப் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்பதுதான்!
– என்று, கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த விலங்குகள் நல சட்ட திருத்தத்தில், மாடுகளை சந்தைகளில் இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, சென்னை ஐஐடி.,யில் பயிலும் கம்யூனிச, இஸ்லாமிய மாணவர்கள் மாட்டுக்கறி விழா நடத்தினர். அதற்கு மறுநாள் ஜெயின் மாணவர்கள் உணவு உண்ணும் ஐஐடி., கேண்டீனில், அங்கே சென்ற சூரஜ் என்ற கேரள கம்யூனிஸ இயக்கத்தைச் சேர்ந்த மாணவர், மாட்டுக்கறியை நீங்களும் சாப்பிட வேண்டும் என்று மிரட்டி, ஜெயின் சமூக மாணவர் வாயில் திணிக்க முயன்றுள்ளார். அவருடன் சென்ற மேலும் இருவர் ஜெயின் சமூக மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
இதனால், அங்கே உணவருந்திக் கொண்டிருந்த மணிஷ் குமார் ஜெயின் என்ற மாணவருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் சூரஜ் மற்றும் மணிஷ் குமார் ஜெயின் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மூவரால் கண்மூடித் தனமாகத் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்து கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மணீஷ் குமார் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
கைத் தகராறில் கீழே விழுந்த சூரஜ்க்கு அங்கிருந்த நாற்காலி பட்டு கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில், சூரஜ் மட்டுமே காயம் பட்டதாகவும், இந்து இயக்க பின்னணி கொண்ட மாணவர்கள் சூரஜ்ஜை தாக்கியுள்ளனர் என்றும் தமிழக, தேசிய ஊடகங்களில் செய்திகள் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். தமிழக எதிர்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சூரஜ்ஜை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இவற்றை எல்லாம் பார்த்த ஐஐடி சக மாணவர்கள், ஊடகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஐஐடியில் பாஜக., தலைவர் சுப்பிரமணிய சுவாமி சொன்னதுபோல், கம்யூனிஸ, இஸ்லாமிய பொறுக்கீஸ்களின் காட்டுமிராண்டித்தனம் அதிகரித்து விட்டதாகவும் கோஷம் எழுப்பியதுடன், சமூக வலைதளங்களில் பெருமளவில் பதிவிட்டனர். இந்நிலையில், ஐஐடி.,யின் மாண்பு காக்கப் பட வேண்டும் என்றும், ஐஐடி., தேசத்தின் சொத்து, அதில், நாட்டுக்கு பயனளிக்கும் மாணவர்கள் உருவாக வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.