
“ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு
பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே
அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்!”
(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம்
சில நாட்கள் தொடரும்)
(இது தற்செயலாக அமைந்த அதிசய ஒற்றுமையாகும்)
ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து
பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார்
‘இந்திரா சௌந்தர்ராஜன்’.
புத்தகம்–மகா பெரியவர்-2
கட்டுரையாளர்-இந்திரா சௌந்தர்ராஜன்
(ஆசிரியர் அனுமதியுடன்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்,
பதிமூன்று வயதில் துறவு மேற்கொண்டதில் இருந்து
87 ஆண்டுகால சன்யாச வாழ்வை வாழ்ந்த அந்த மகான்
இந்த பாரதபூமியில் செல்லாத இடம் இல்லை. அவர் கால்
படாத மாநிலம் என்று ஒன்றைக்கூடச் சொல்ல முடியாது.
ஆதிசங்கரரின் அடியொற்றி அத்வைதக் கருத்துகளோடு
அவர் மேற்கொண்ட யாத்திரைகள்..அதில் அவருக்கு கிடைத்த
அனுபவங்கள்..அப்போதெல்லாம் அவர் ஆற்றிய பேருரைகள்..
அதில் நாம் தெரிந்து தெளிய மின்னிடும் கருத்துக்கள்
என்று அவர் வாழ்வே ஒரு இறைகொடை.
அவர் ‘இறைவன் ஒருவனே’ என்கிற கருத்தை வழிமொழிந்த
ஓர் அத்வைதியாக இருக்கலாம். ஆனால் அந்த ஒருவன்தான்
நாம் உண்ர பலவாக இருக்கின்றான் என்பதை அவர்
நமக்கெல்லாம் உணர்த்திய விதம் அற்புதமானது.
பெரியவரின் பின்புலம் இந்து மரபாக இருக்கலாம். ஆனால்
அவரை மதம் கடந்து மற்ற மதத்தவர்களும் நேசித்தார்கள்.
கடவுள் இல்லை என்னும் நாத்திகர்கள் கூட பெரியவரின்
தவத்தையும் அவர் கருணையையும் கண்டு வியந்தார்கள்.
இந்த தொடர் அவர் பிறப்பில் இருந்தே ஆரம்பமாகிறது.
அப்போதுதான் அவரது தெய்வீகச் சிறப்பை பாமரர்களாலும்
புரிந்து கொள்ள முடியும்.
கடந்த நூற்றாண்டு மனிதரில் ஒரு மகாத்மா காந்தியை
நமக்குத் தந்தது.கவிஞர்களில் ஒரு பாரதி கிடைத்தார்.
அதுபோல ஓவியத்துக்கு ஒரு ரவிவர்மா,இசைக்கு ஒரு
எம்.எஸ்.சுப்புலட்சுமி,சமூக சேவைக்கு ஒரு தெரசா என்று
கடந்த நூற்றாண்டு பல மனிதர்களை நமக்கு தந்தது.
அது ஆன்மீகத்துக்கும் சன்யாசத்துக்கும் இலக்கணமாக
தந்தது பெரியவரைத்தான்.
பெரியவர் பிறந்த இடம் விழுப்புரம்.
விழுப்பங்கள் நிறைந்த புரம் என்பதே விழுப்புரம் என்பதாக
கூறுவர்.விழுப்பம் என்றால் உயர்வு,உன்னதம்,தூய்மை,
மேன்மை என்று பல பொருள் தரும் ஒரு சொல்லாகும்.
திருவள்ளுவர்கூட இச்சொல்லை பயன்படுத்தி குறள்
ஒன்றை படைத்துள்ளார்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான்;ஒழுக்கம்
.உயிரினும் ஓம்பப்படும்”
என்கிறார் வள்ளுவர்.அவர் கூற்றுப்படி இங்கே விழுப்பம்
எனும் சொல்லுக்கு மேன்மை என்பது பொருளாகும். அந்த்
பொருள்படி பார்த்தால் விழுப்புரம் எனும் பெயர்
மேன்மைகளைத் தரும் இடம் என்றாகிறது
அது உண்மை என்பது போல நம் பெரியவரும் விழுப்புரத்தில்
பிறந்தார்.பெரியவரின் பெற்றோர் பெயர் சுப்ரமண்ய சாஸ்திரி
மகா லட்சுமி அம்மாள். 1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி
அனுஷ நட்சத்திரத்தில் பிரதமை திதியில் பிறந்த பெரியவர்
தன் பெற்றோருக்கு இரண்டாவது மகன்.
இவருக்கு முன் பிறந்தவர் பெயர் கணபதி. எனவே இவருக்கு
பெற்றோர் சுவாமிநாதன் என்ற பெயரை வைத்தனர்.
பெரியவருக்குப் பின்னர் ஒரு பெண்ணும்,அதற்குப் பின்னர்
3 ஆண் குழந்தைகளும் உண்டு.ஆக பெரியவரின்
பெற்றோருக்கு மொத்தம் 6 பிள்ளைகள்.
அவர்கள் பெயர்களை வரிசைப்படுத்தினால், அதில் ஓர்
அபூர்வ ஒற்றுமை தெரியும்.
முதலாமவர் பெயர் கணபதி
அடுத்து நம் பெரியவர் சுவாமிநாதன்
மூன்றாவதாக லலிதாம்பாள்
நான்காவதாக சாம்பமூர்த்தி.
ஐந்தாவதாக சதாசிவம்.
ஆறாவது கிருஷ்ணமூர்த்தி.
இந்தப் பெயர்களே நம் இந்த மரபில் ஆதிசங்கரர் வகுத்துத்
தந்த ஆறு விதமான வழிமுறைகளைக் கொண்டிருப்பது
புலன் ஆகும். ஒன்றாகிய இறைவனை இந்த ஆறு வழிகளில்
எந்த ஒன்றில் சென்றாலும் அடையலாம் என்பதே
ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு ஆகும்.
அந்த கோட்பாடு பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே
அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்.
கணபதி–காணாபத்யம் என்னும் வழிமுறையையும்
சுவாமிநாதன்—கவுமாரம் எனும் வழிமுறையையும்
லலிதா–சாக்த வழிமுறையையும்
சாம்பமூர்த்தி–சௌரம் எனும் ஆரிய வழிபாட்டையும்
சதாசிவம்–சைவ நெறிமுறைகளையும்
கிருஷ்ணமூர்த்தி–வைணவ நெறிமுறைகளையும்
நமக்கு உணர்த்துகிறது.
இது தற்செயலாக அமைந்த அதிசய ஒற்றுமையாகும்.


