மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப் பட்டுள்ளதால் ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடத்திக் கொள்ளுங்கள் என்று, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி முகமது அயூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் தொழுகைகளை வீடுகளிலேயே மேற்கொள்ள அரசு தலைமை காஜி முகமது அயுப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 25 அன்று இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக, ரம்ஜான் பண்டிகை அன்று அனைத்து இஸ்லாமியர்களும் மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்துவர். ஆனால் இம்முறை, கொரோனா பரவல் காரணமாக, தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் படி, தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் எந்தவொரு வழிபாட்டு தலமும் திறக்கப்படவில்லை. எனினும் நீதி மன்றத்தை அணுகி, வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கோரி மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப் பட்டதால், மே 31ம் தேதி வரை எந்த வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.
இந்நிலையில் ரம்ஜான் அன்றும் மசூதிகள் திறக்கப்படாது என்றும், மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடத்திக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.