‘பசியில்லா கரூர்’ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் நிகழ்ச்சியில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் ‘பசியில்லா கரூர் உருவாக்கும் முயற்சியில்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. உடல் ஊனமுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், கரூரில் சாலையோரம் உள்ள ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கி வருகிறது இந்த தனியார் அறக்கட்டளை.
ஓராண்டைக் கடந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தனியார் தொண்டு அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கும் அதிமுக., கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை உதயகுமார் (தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்) ஏற்பாடு செய்திருந்தார். அறக்கட்டளையைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.