ராமநாதபுரத்தில் ரூ.500 கமிஷனுக்கு ஆசைப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்களின் பெயரில் ரூ.50 லட்சம் கடன் பெற்று தலைமறைவான பெண் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 5வது தெருவில் வசித்தவர் பிரியா. ஜவுளிக்கடை நடத்தினார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக பெண்களிடம் கூறினார்.
மேலும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களின் நகல்களை கொடுத்தால் ரூ.500 முதல் ரூ.1000 வரை கமிஷன் தருவதாகவும் தெரிவித்தார்.
இதை நம்பிய 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல்களை அவரிடம் கொடுத்தனர். அதைக்கொண்டு அவர்கள் பெயரில் ரூ.50 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற பிரியா, ஜவுளிக்கடையை மூடிவிட்டு தலைமறைவானார்.
இந்நிலையில் கடனை திரும்ப செலுத்தும்படி நிதி நிறுவனத்தினர் பெண்களிடம் வலியுறுத்தினர். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் எஸ்.பி., கார்த்திக்கிடம் புகார் அளித்தனர். அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.