சென்னை: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல், உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டதாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட 5 பேருக்கு மொத்தமாக ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜயகாந்த் மீது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரசுத் தரப்புகளில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தங்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்ய வழிவகை செய்யும் குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவுகளை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜயகாந்த், பிரேமலதா உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் 12 வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில், சுப்பிரமணியன் சாமி மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை பெற்றார். இந்நிலையில், விஜயகாந்த் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, அவர்களது வழக்கறிஞர்கள், ‘ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்துள்ளதால், இந்த 12 வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்’ என்றனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதற்கு அனுமதி வழங்கினர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த்தின் வழக்குரைஞர், ‘இந்த 12 வழக்குளில் சில ஆவணங்களில் தமிழில் உள்ளதாகவும், அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியதுள்ளது; எனவே, இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற ஒரு வார கால அவகாசம் தேவை” என்று கேட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘ஏற்கெனவே, உங்களுக்கு அனுமதி வழங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். எனவே, இந்த 12 வழக்குகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கின்றோம். இந்த அபராதத் தொகையை மனுதாரர்கள் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட 5 பேர் வழங்க வேண்டும். மேலும், 15 நாட்களுக்குள் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், 12 மனுக்களையும் தள்ளுபடி செய்து விடுவோம’ என்று உத்தரவிட்டனர்.
To Read this news article in other Bharathiya Languages
அவதூறு வழக்குகளை உச்ச நீதிமன்றம் எடுத்துச் செல்லாமல், உயர் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari