- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்தியா தெனாப்பிரிக்கா மூன்றாவது இறுதி டி20 போட்டி, இந்தூர், 04.10.2022
தென் ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி
தென் ஆப்பிரிக்கா அணி (20 ஓவர் முடிவில் மூன்று விக்கட் இழப்பிற்கு 227 ரன், ரிலீ ரோஸ்கோ 100, டி காக் 68) இந்திய அணியை (18.3 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட், தினேஷ் கார்த்திக் 46, தீபக் சாஹார் 31, பந்த் 27, உமேஷ் யாதவ் 20, பிரிடோரியஸ் 3/26) 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இந்தியப் பந்து வீச்சாளர்கள் ஒருவர் கூட சரியாகப் பந்து வீசவில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் டி காக்கும், ரோஸ்கோவும் சிறப்பாக ஆடினர்.
இறுதியில் டேவிட் மில்லர் ஐந்து பந்துகளில் 19 ரன் அடித்தார். ரோஸ்கோ தனது முதலாவது டி20 சதம் அடித்தார். டி காக் தனது நாலாவது டி20 அரை சதம் அடித்தார். இருபது ஓவர் முடிவில் அந்த அணி 227 ரன் எடுத்திருந்தது.
கடினமான இலக்கை அடைய ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அணித்தலைவருமான ரோஹித் ஷர்மா முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். இன்று கே.எல்.ராகுல், விராட் கோலி ஆடவில்லை.
அவர்களுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆடினார்கள். ரிஷப் தொடக்க வீரராக இறங்கினார். ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் தினேஷ் கார்த்திக் ஆடவந்தார். சிக்சர், ஃபோர் என மளமளவென அடித்து 46 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
அவருக்கு முன்னர் ரிஷப் பந்த் ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவையும் சேர்த்து முதல் ஐந்து பேட்டர்கள் எட்டு ஓவர் முடிவதற்குள் அணியின் ஸ்கோர் 86ஆக இருக்கும்போது பெவிலியன் திரும்பிவிட்டனர்.
அதன் பின்னர் தீபக் சாஹார் (30 ரன்), உமேஷ் யாதவ் (20 ரன்), ஹர்ஷல் படேல் (17 ரன்), சிராஜ் (12 ரன்) எடுத்தனர். இருபது ஓவர்களை முழுமையாக இந்திய அணியால் ஆடமுடியவில்லை.
எனவே தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இன்று சதமடித்த ரிலீ ரோஸ்கோ ஆட்ட நாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
அடுத்து தெனாப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும். முதல் போட்டி லக்னோவில் அக்டோபர் 6ஆம் தேதியும், இரண்டாவது போட்டி ராஞ்சியில் அக்டோபர் 9ஆம் தேதியும் மூன்றாவது போட்டி அக்டோபர் 11ஆம் தேடி டெல்லியிலும் நடைபெறும். புதிய இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் ஆடும்.