உண்மை என்னவென்றால், காந்தியின் ‘ அகிம்ஸை‘க் கொள்கை எல்லா காலத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானது அல்ல என்பது நிரூபணமானது. உன்னுடைய எதிரி கொடிய நோக்கோடு,ஆயுதங்களோடு உன்னை தாக்க வருகிறான்.. ‘’ ப்ளீஸ் ப்ளீஸ் ‘’ அகிம்ஸை, அகிம்ஸை..என்றா கோஷமிட முடியும்..
பாகிஸ்தானே எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது… எல்லையில் உண்ணாவிரதத்தில் அமர்ந்து கொண்டு ‘’ பாகிஸ்தானே இப்படிச் செய்யாதே ‘’ என்று கூறிக் கொண்டா இருக்க முடியும்.
பல சமயம் பலர் துள்ளுவதற்கு காரணமே அடியென்றால் என்னவென்று அறிந்திராது இருப்பதுதான்…
காந்தியின் அகிம்ஸை கொள்கை அவர் காலத்திலேயே தோற்றுப் போன ஒன்று. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப சாம, தான, பேத, தண்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் பெரியோர்கள் நமக்கு வகுத்தளித்த நீதி..
மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடியவர்களிடம், துண்டாடி விட்ட பிறகும் மீண்டும் ஆக்கிரமிக்கத் துடிப்பவர்களிடம்… அகிம்ஸையை பேசுவது வீண். தண்ட பிரயோகம் மட்டுமே சரியான அணுகுமுறை என்று காந்திக்கு புரியாது போனது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
நம் நாட்டின் 1947-48ன் தேவையும் சரி, இன்றைய தேவையும் சரி க்ஷத்திரிய தேஜஸே. அத்தகையோர்தான் நாட்டை வழி நடத்த முடியும்.
காந்தி வாழ்ந்த காலத்திலேயே காங்கிரஸுக்கு உள்ளிலும், வெளியிலும் அகிம்ஸை கொள்கையை ஏற்பவர்கள் இல்லை. காந்தி மட்டுமே ’’ அகிம்ஸை வாங்கலயோ அகிம்ஸை ‘’ என்று கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தார். அன்று நிலவியது ஒரு அசாதாரணமான சூழ்நிலை..
பாகிஸ்தானிலிருந்து வெளியேறி சொந்த நாட்டிற்கே அகதிகளாக வந்து விட்டவர்களை கண்டிப்பதும், திரும்பி போங்கள் என்று சொல்வதும் வக்கிரத் தனமானது மட்டுமல்ல முட்டாள்தனமானது என்று காந்திக்கு மட்டும் புரியாது போனது விந்தையிலும் விந்தை !
தன்.. நம்பிக்கை.கொள்கை என்ற பெயரால் தன் சொந்த மக்களையே பலிதானிகள் ஆக்க முயற்சித்த அந்தப் பெரிய மனிதரின் ஞானத்தை என்னவென்று சொல்வது…
‘ஒரு காலத்தில் நாடு நான் சொல்வதைக் கேட்கத் தயாராக இருந்தது. ஆனால் இன்று நான் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டேன் ‘’ உண்ணாவிரதத்திற்கு சில வாரங்களுக்கு முன் காந்தி வெளிப்படையாகப் பேசிய வார்த்தைகள்.
இந்த உண்ணாவிரதத்தின் மூலம் மக்கள் மீது தனக்கிருக்கும் செல்வாக்கைப் பரிசோதிக்க காந்தி விரும்பினார். அப்போது அவருக்கு வயது 79. இந்த உண்ணாவிரதத்தை அவர் உடல் தாங்குமா?
இதையெல்லாம் டெல்லியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க மவுண்ட்பேட்டன் தயாராக இல்லை. ராஜஸ்தான் மாநிலத்து பிகானர் நகரத்திற்கு, பிகானர் ராஜாவோடு சேர்ந்து கொண்டு மான்கெளதாரிகளை வேட்டையாடச் சென்று விட்டார்.
காந்தியின் உண்ணாவிரதம் பற்றிய செய்திகள் 14 மொழிகளிலே வானொலியில் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்ததை மராட்டிய மாநிலம் புனாவில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இருவர் பெயர்கள் நாதுராம் கோட்ஸே மற்றும் நாராயண் ஆப்தே.!
அந்த கணத்தில் அவர்கள் எடுத்த முடிவு …
‘காந்தி கொல்லப்பட வேண்டும்‘
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்