விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நூதன முறையில் நகைத்திருட்டு நடைபெற்றுள்ளது. முகநூலில் பெண்களை குறி வைத்து பெண்களின் குரலிலேயே பேசி, அவர்களிடமிருந்து நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவர் மீது ஏற்கெனவே இருந்த திருட்டு வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த மோசடியும் தெரிய வந்துள்ளது.
முகநூலில் பெண்களிடம் நண்பர்களாகி, அவர்களிடம் பெண் குரலில் பேசிய கொள்ளையர்கள், தங்களுடைய நகைகளை ஒரு குறிப்பிட்ட கோவிலில் வைத்து வழிபட்டதால் செல்வம் பெருகியதாகக் கூறி அதே போல் நகைகளை வைத்து வழிபட அந்த பெண்களையும் தூண்டியுள்ளனர்.
இதை நம்பி அவ்வாறு நகைகளை வைத்து பெண்கள் வழிபடும் போது, கோவிலை சுற்றி வருவதற்குள் நகைகளை எடுத்துக் கொண்டு மாயமாகியுள்ளனர்.
நவீன்குமார் தனது நண்பர் ராஜ்குமாருடன் இணைந்து இந்த நூதன நகை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும்61 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.