பொங்கல் வந்துவிட்டது… லீவும் விட்டாச்சு… ஆனால் ஆறு நாட்கள்..! ஆறு நாட்கள் அடேங்கப்பான்னு பார்க்கும் வகையில் தமிழகத்தில் எடப்பாடி அரசு, வரலாற்றில் முதல்முறையாக நீண்ட நாட்களுக்கு விடுமுறையை அறிவித்திருக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15 மற்றும் 16, 17 தேதிகள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு ஜனவரி 14ம் தேதியும் விடுமுறை என அறித்துள்ளது
12 சனிக்கிழமை என்பதால் 12, 13, 14, 15, 16, 17 ஆகிய ஆறு நாட்களும் தொடர்ந்து விடுமுறை தினமாக வருகிறது. 14ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 9ஆம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விடுமுறை விஷயங்களில் எம்.ஜி.ஆர் -ஜெயலலிதாவே முடிவெடுக்காத அதிரடிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியூர்களுக்குச் செல்லும் நபர்களின் சந்தோஷத்தை கணக்கில் கொண்டு அறிவித்து வருகிறார்.
தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. 5ம் தேதி திங்கட்கிழமை என்பதால் ஒருநாள் கூடுதலாக விடுமுறையை தமிழக அரசு அறிவித்தது. இதனால் தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்கள் நான்கு நாட்களானது. பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு, ஜாலியாக சென்னைக்குத் திரும்பினர்.
அதுபோல் தற்போதும் பொங்கல் பண்டிகைக்கு ஆறு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
பண்டிகை விடுமுறை ஓரிரு நாட்கள் என்றிருந்தபோது, சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு, சென்னைக்கு அவசர கதியில் திரும்ப வழியின்றி தவித்தனர் பலரும். பஸ், ரயில் கூட்டம் என பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதையே தவிர்த்தனர்! இந்நிலையில் 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், விரும்பிய நாட்களில் அல்லது கூட்டம் குறைவாக இருக்கும் நாட்களில் ஊருக்குச் சென்று திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள்!