
நெல்லை- திருச்செந்தூர் அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ரெயில் பாதையை இன்று தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ. கே.சித்தார்த்தா ஆய்வு செய்தார்.
நெல்லை- திருச்செந்தூர் அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதற்காக இந்த ரெயில் பாதையில் ஆறுமுகநேரியில் ஒரு துணைமின் நிலையமும், பாளை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் ஆகிய பகுதியில் 4 உபமின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணை மற்றும் உபமின் நிலையங்களில் இருந்து 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மூலம் இந்த மின்சார ரெயில் சேவை தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த புதிய ரெயில் பாதையை இன்று தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ. கே.சித்தார்த்தா ஆய்வு செய்தார். இந்த ஆய்வு சிறப்பு ரெயில் மூலம் காலை 8.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து தொடங்கியது. முதலில் பாளையில் உபமின் நிலையம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆற்றுப்பாலம், நாசரேத்தில் உள்ள உபமின் நிலையம், ஆறுமுகநேரி அருகே உள்ள ரெயில்வே கேட் மற்றும் வழியில் குறுக்கிடும் தமிழ்நாடு மின்சார வாரிய மின் தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் வழியில் உள்ள ரெயில் நிலையங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டு திருச்செந்தூருக்கு மதியம் சென்றடைந்தார். பின்பு திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரை ஆய்வு ரெயிலை மின்சார எஞ்சின் மூலம் இயக்க ரெயில் மின் பாதையில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டது.
எனவே பொதுமக்கள், பயணிகள் பேராபத்தை விளைவிக்கும் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் ரெயில் மின் தடத்தை நெருங்கவோ, தொடவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமான எச்சரிக்கை விளம்பர பலகைகள் ரெயில் நிலையங்களில் பயணிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டிருந்தது. மின்சார எஞ்சின் பொருத்திய ஆய்வு ரெயில் திருச்செந்தூரில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு மீண்டும் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்ததது. தலைமை முதன்மை மின் பொறியாளர் ஆய்வறிக்கைக்கு பிறகு இந்த பகுதியில் ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த ஆய்வில் கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ரமேஷ் பாபு, சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ரமேஷ் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு மின்மயமாக்கப்பட்ட ரெயிலை இயக்குவது தொடர்பாக இன்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக 4 இடங்களில் உப மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் இன்று அதன் செயல்பாடு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் 2 வாரத்தில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு மின்மயமாக்கப்பட்ட என்ஜினை கொண்டு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.