சென்னை:
செல்ஃபி மோகம் இப்போது பலரையும் ஆட்டி வைக்கிறது. எதனோடுதான் செல்பி எடுப்பது என்ற வரைமுறை இல்லாமல் பலரும் எடுத்து சமூக தளங்களில் பகிர்வதால், பல சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.
ஆனால் இங்கே வித்தியாசமாக இருவர் கஞ்சா வுடன் செல்பி எடுத்து போலீசில் வசமாய் மாட்டிக் கொண்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான கமல். 35 வயதாகும் இவர், தனது வீட்டு மாடியில் கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார்.
இவரது நண்பர் சசிகுமார். சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான இவர், ஆர்வக் கோளாறால் அந்த கஞ்சா செடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார். தொடர்ந்து அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரித்த போலீஸார் ஆட்டோ ஓட்டுநர் கமல் வீட்டில் வளர்க்கப் பட்டு வந்த 1 அடி உயர இரண்டு கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்து, கஞ்சா வளர்த்த கமலையும், அதனை செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிய சசிகுமாரையும் கைது செய்தனர்.