கவிஞர் : மீ.விசுவநாதன்
அன்னை தந்தையைப் போற்றும் – பண்பை
ஆனை முகனே விதைத்தான்
இன்பம் அடைந்திட வேண்ட – உடன்
ஈயும் குணத்தினைக் கொண்டான்.
உன்னுள் உலகமே என்னும் – ஞான
ஊற்றை உணர்ந்திடச் செய்தான்
என்னுள் மாயையை நீக்கி – ஒளி
ஏற்றி மகிழ்வினைத் தந்தான்.
ஐந்து கரத்தவ னான – “டுண்டி”
ஐயன் கணபதி காப்பான்
ஐந்து புலனுளும் உள்ளான் – இதில்
ஐயம் எதுவுமே வேண்டாம்.
ஒன்றே அவனென எண்ணி – மனம்
ஓம்ஓம் எனகணம் ஓத
ஒன்றி அவனென ஆவோம் – தமிழ்
ஔவை உரைத்ததைக் கொள்வோம்.
(இன்று 02.09.2019 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி தினம்)