இந்த மாத இறுதி நாளான ஜனவரி 31ம் தேதியுடன் சுமார் 1 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பணி நிறைவு பெறுவதற்கு முன்பாகவே விருப்ப ஓய்வு என்ற திட்டத்தின் கீழ் வழி அனுப்பி வைக்கப் போகிறது.
ஒரு இந்திய அரசு நிறுவனத்திலிருந்து இவ்வளவு பேரை ஒரே நேரத்தில் வழி அனுப்பி வைப்பது இதுவே வரலாற்றில் முதல்முறை ஆகும்.நாட்டின் தகவல் தொடர்பை மிக உயரத்துக்கு எடுத்து சென்ற பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) அறிவித்திருந்தது.
பிஎஸ்என்எல் ஊழியர்களில் 50 வயதை கடந்தவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என நிர்வாகம் அறிவித்தது. 60 வயது வரை பணியில் நீடிக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில், இத்தனை ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெறுவதற்கு சம்மதித்தனர் என்றால்
விருப்ப ஓய்வு பெற்றாலும் 60 வயது வரை மாதந்தோறும் 25 நாட்களுக்கான ஊதியத்தை வீட்டில் இருந்தபடியே பெறலாம். 60 வயது பூர்த்தி அடையும் நாளில் பல லட்சம் ரூபாய் பணிக்கொடையாக வழங்கப்படும் போன்ற ஊழியர்களுக்கு சாதகமான விஷயங்களால் இந்த முடிவை எடுக்க காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு முதலே ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்காமல் ஊழியர்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், விருப்ப ஓய்வை ஏற்காதவர்கள் இந்தியாவின் எந்த மூலைக்கும் இடமாற்றம் செய்யப்படலாம் போன்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரப்பப்பட்டதும் ஊழியர்களை விருப்ப ஓய்வை நோக்கி சென்றுள்ளனர்.
போதிய லாபம் ஈட்ட முடியாத காரணத்தால் அதை சரி செய்வதற்கு ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று நிர்வாகத்தரப்பில் சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு பணியாற்றாமலே மாதந்தோறும் ஊதியம் வழங்குவது செலவை எப்படி குறைக்கும் நடவடிக்கையாக இருக்க முடியும் என்பது சாமானியர்களின் கேள்வியாக இருக்கிறது.
அதுவுமின்றி வேலை வாங்காமல் ஊதியம் அளிப்பது பெருமளவில் மனித ஆற்றலை வீணடிக்கும் செயலாகும். விருப்ப ஓய்வு அளித்த ஊழியர்களுக்கு கடைசி பணி நாள் வரும் ஜனவரி 31ம் தேதி ஆகும்.
ஆனால் சிலரோ கிடைக்கும் தொகையில் கால்பங்கு தொகை வரியாக பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்ற செய்தியால் அச்சத்தில் உள்ளனர்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபம் ஈட்டி வளர்ச்சி பாதையில் செல்லும் என்று சிலரும் இதனால் சேவை பாதிப்பு ஏற்பட்டு தனியார் அலைபேசி நிறுவனங்கள் வளர்ச்சி அடைய தான் மறைமுகமாக வழிவகுக்கும் என்று சிலரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர்.
விருப்ப ஓய்வு திட்டம் என்பது பிஎஸ்என்எல் மட்டுமின்றி மற்ற பொதுத்துறை நிறுவனங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என நீண்டுக் கொண்டு போகிற வாய்ப்பு உள்ளது.
எனவே தற்போது பணியில் இருப்பவர்கள் தங்கள் பணி 50 வயது வரை தான் என முடிவு செய்து அதற்கேற்ப திட்டமிடுதலே சிறப்பு.
லட்சக்கணக்கான பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறிவிட்டு தற்போது பணியில் இருப்பவர்களையே வீட்டுக்கு அனுப்புவது எந்த விதத்திலும் நியாயமாகாது.