திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று, ஹிந்து சமய அறநிலைய துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதுநிலை கோயில்களின் செயல் அலுவலர்கள் இணை உதவி ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஊரடங்கால் தொழில் வருமானம் இன்றி தவிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவை முதல்வர் நிவாரண நிதியால் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே முதல்வர் நிவாரண நிதிக்கு இன்று மாலைக்குள் தக்கார், அறங்காவலரின் தீர்மானத்துடன் அறநிலைய துறைக்கு உரிய நிதியை அனுப்ப வேண்டும்.
பழநி, திருச்செந்துார், மதுரை, திருத்தணி, திருவேற்காடு, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், ராமேஸ்வரம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்கள் தலா 35 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
பண்ணாரி, அழகர்கோயில், மருதமலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழநி ஆண்டவர், மாங்காடு, திருப்பரங்குன்றம், சங்கரன்கோவில், சுவாமிமலை, மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில்கள் தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
காஞ்சிபுரம் தேவராஜர், திருவொற்றியூர் தியாகராஜர், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர், மேல்மலையனுார் அங்காளம்மன் உள்ளிட்ட கோயில்கள் தலா 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இந்த 47 கோவில்களின் உபரி நிதியான 10 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். – என்று அதில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
இதனிடையே, இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். திருக்கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள், கோயில் கடைநிலைப் பணியாளர்கள் பலர் பசி பட்டினி என்று அன்றாட வாழ்க்கைக்கே அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு உதவாமல் இவ்வாறு அறநிலையத்துறை செய்வது தவறு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.