ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோப்பூர் பகுதியில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்களின் ரோந்து வாகனத்தில் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
அதே பகுதியில் நின்று கொண்டிருந்த கார் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காரில் இருந்த ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருப்பினும் காருக்குள் இருந்த 3 வயது சிறுவனை குண்டடிபடாமல் அங்கிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் காப்பாற்றினர்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் பதில் தாக்குதலை முன்னெடுத்த போது, தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் சி.ஆர்.பி.எப் வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு, அங்கு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
#WATCH Jammu & Kashmir Police console a 3-year-old child after they rescued him during a terrorist attack in Sopore, take him to his mother. The child was sitting beside his dead relative during the attack. pic.twitter.com/znuGKizACh
— ANI (@ANI) July 1, 2020