கடந்த 2007ஆம் ஆண்டில், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்பனைக்கு விடப்பட்டது. அந்த நடவடிக்கையில் பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக சிஏஜி – மத்திய கணக்காய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிஐ 2009 அக்டோபர் 21ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. பின், இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது. இது அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக.,வுக்கு மிகப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியதுடன்,மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் ஆர். ராசா 2010 நவம்பரில் விலகினார்.
இதை அடுத்து, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க, சிபிஐ தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, ஓ.பி.ஷைனி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆ.ராசா, தி.மு.க எம்பி., கனிமொழி, தயாளுஅம்மாள் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இவர்கள் மீது மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், இரண்டை சிபிஐ-யும், ஒன்றை அமலாக்கப் பிரிவும் தாக்கல்செய்தது. இந்த வழக்கின் இறுதி வாதம் முடிந்ததையடுத்து, தற்போது தீர்ப்பு குறித்த அறிவிப்பை நீதிபதி ஓ.பி.ஷைனி வெளியிட்டுள்ளார்.
‘2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்படும். ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால், அடுத்த 10 நாள்களில் தீர்ப்பு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.