சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாரிடம் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளில், மேலும் ஒரு சிபிஐ., அதிகாரிக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வர்த்தகர்கள் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசார் கண்மூடித் தனமாக அடித்ததில் உயிரிழந்தனர். இது பெரும் பரபரப்பான நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் என 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி துறையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப் பட்டது.
இதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போலீசாரிடம் விசாரணை நடத்திய 4 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில்,மதுரையில் மேலும் ஒரு சி.பி.ஐ., அதிகாரிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
- ரவிச்சந்திரன், மதுரை