கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்த நபருக்கு கடந்த 24-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நபரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருந்ததால் குடும்பத்தினர் நான்குபேரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
அவர்கள் தங்கள் வீட்டை பூட்டிவிட்டு சாவியை கையோடு எடுத்துச்சென்றனர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்த நால்வரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மூன்றேகால் பவுன் நகைகளை திருடியதுடன், வீட்டில் இருந்த டிவியையும் கொள்ளையர்கள் தூக்கிச்சென்றனர்.
இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் நகை மற்றும் ,டிவியை திருடிய திருடனை வலைவீசி தேடிவருகின்றனர்.