தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி தமிழக போலீஸால் போடப்பட்டுள்ள வழக்கில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினால் அவரைக் கைது செய்ய மாட்டோம் என உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எஸ்.வி.சேகர் யூ டியூபில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், காவியைக் களங்கம் எனக் கூறும் முதலமைச்சர் தேசியக் கொடியில் காவியை அகற்றிவிட்டுக் கொடியேற்றுவாரா என்று கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் சிலைக்கு காவித் துணி அணிவித்ததாக எழுப்பப் பட்ட பிரச்னையைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுக்கு பதிலாகக் கேட்ட கேள்வி இது. ஆனால் இது தொடர்பாக தமிழக போலீஸார், தேசியக் கொடியை எஸ்.வி.சேகர் அவமதித்துவிட்டார் என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
ஏற்கெனவே ஆளும் தரப்பில் அமைச்சர் ஜெயகுமாருடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டதால், எப்போது என்ன செய்வோம் என்ற கடுமையான காழ்ப்புணர்வுடன் ஆளும் தரப்பால் பழிவாங்கல் நோக்குடன் எதிர்நோக்கப் பட்டுவரும் நிலையில், எஸ்வி சேகரின் இந்தப் பேச்சை வைத்து அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இதை அடுத்து, இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி எஸ்வி சேகர் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீதான விசாரணையின் போது, மன்னிப்பு கோருவதற்கு எஸ்.வி.சேகருக்கு செப்டம்பர் 2 வரை கெடு விதிக்கப்பட்டதுடன், விசாரணையும் அன்றைய தினத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சைபர்கிரைம் காவல்துறையினர் முன்பு, எஸ்.வி.சேகர் வழக்கம் போல் சட்டையில் தேசியக் கொடியைக் குத்திய படி, இன்று இரண்டாம் முறையாக விசாரணைக்கு ஆஜரானார்.