சென்னையில் கணவன், மனைவி போல் நடித்து வாடகைக்கு வீடு எடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வளசரவாக்கம் ராயலா நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறை, குறிப்பிட்ட வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு இரண்டு ஆண்கள் ஒரு இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை மீட்ட காவல்துறை, அவரை காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த இரண்டு ஆண்களையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் தன்னுடைய ஆனந்த் (21) என்பதும், மற்றொரு தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிலால் (27) என்பதும் தெரியவந்தது. பாலியல் தொழில் செய்து வரும் இரண்டு தரகர்கள், ஒரு ஆண் மற்றும் பெண்ணை கணவன்-மனைவி போல் நடிக்க வைத்து குறிப்பிட்ட வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அதை தொடர்ந்து பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.
போலீசாரின் கைது நடவடிக்கையை அடுத்து குறிப்பிட்ட இரண்டு தரகர்களும் தலைமறைவாகிவிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் மற்றும் பிலால் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட இணையதளத்தின் பின்னணியை பெறும் முயற்சியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்