அமைந்தகரையில், பட்டப்பகலில், மர்ம நபர்கள் வீடு புகுந்து வெட்டியதில், தாய் பரிதாபமாக உயிரிழந்தார். மகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, அமைந்தகரை, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 48; கார் ஓட்டுனர். அவரது மனைவி ஜெயந்தி, 44. இவர்களது மகள் மோனிகா, 23; மென்பொறியாளர். நேற்று காலை, கமலக்கண்ணன் பணிக்கு சென்றுவிட்டதால், வீட்டில் ஜெயந்தி, மோனிகா மட்டும் தனியாக இருந்துள்ளனர்.
அப்போது, வீட்டிற்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பினர். தாய், மகளின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு, சிகிச்சை பலனின்றி ஜெயந்தி உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், மோனிகா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அமைந்தகரை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
நடந்த சம்பவத்திற்கு ஒரு தலைகாதல் காரணமா அல்லது முன்விரோதம் காரணமா என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து, தாய், மகளை அரிவாளால் வெட்டிய சம்பவம், அமைந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.