மின்னல் தாக்கி 16 வயது பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையம் அடுத்துள்ள ஓமுடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு மீரா என்ற 16 வயது மகள் உள்ளார். மீரா போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் அந்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் மழைவருவதுபோல் இருந்துள்ளது.
அப்போது தனது வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த ஆட்டுக்குட்டிகள் நனைத்துவிடாமல் இருப்பதற்காக, மீரா அந்த ஆட்டுக்குட்டிகளை பிடித்துக்கொண்டு வீட்டின் எதிரில் உள்ள தென்னை மரத்தில் கட்டுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது திடீரெனெ பயங்கர சத்தத்துடன் தோன்றிய மின்னல், தென்னை மரத்தடியில் நின்று கொண்டிருந்த மீரா மீது தாக்கியது. இந்த திடீர் சம்பவத்தில் மீரா மின்னல் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இளம் வயதில் பள்ளி மாணவி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.