முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் (72) கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் (வயது 72) கே.கே நகர் 42வது செக்டரில் வசித்து வந்தார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (மே 12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயது மூப்பின் காரணமாக கொரோனா தாக்கத்தில் இருந்து மீளமுடியாமல் அதிகாலை உயிரிழந்தார்.
அவரது உடல் கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டூருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்படுகிறது. 36 ஆண்டுகளாக சிபிஐ.,யில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரகோத்தமன், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர், ராஜிவ்கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அத்துடன் ராஜிவ் கொலை குறித்து ஊடக விவாதங்களில் பங்கேற்று கருத்துக்களை கூறி வந்துள்ளார்.