செங்கோட்டை – புனலூர் அகல ரயில் வழித்தடம் மின்மயமாதலுக்கான ஆணையை ரயில்வே அமைச்சகம் விரைந்து வெளியிட தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
தென் தமிழகத்தில் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழித்தடம் , தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழித்தடம் மற்றும் திருநெல்வேலி, திருச்செந்தூர் வழித்தடம் இவற்றின் அகல ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளுக்கான ஒப்பந்த ஆணைகள் ரயில்வே அமைச்சகத்தால் மும்பையைச் சேர்ந்த லார்சன் டூப்ரோ குழுமத்திற்கு வழங்கப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து பணிகளையும் 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல கேரள மாநில கொல்லம் புனலூர் வழித்தடம் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியை சென்னையைச் சேர்ந்த திருமூர்த்தி குழுமம் செய்து வருகின்றது. இந்தப் பணி 2022 மார்ச் மாத இறுதியில் நிறைவுறும். இதனால் 2023 மார்ச் இறுதியில் இந்த கொல்லம் – விருதுநகர் வழித்தடத்தில் புனலூர் செங்கோட்டை வழித்தடம் மட்டும் மின்மயமாதல் இல்லாத ரயில் பாதையாக ஒரு தீவு போல திகழும்.
எனவே தமிழக முதலமைச்சர் மற்றும் தென்காசி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களும் கேரள மாநில முதலமைச்சர் கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இப்பணியில் இணைந்து ஆவன செய்து செங்கோட்டை – புனலூர் வழித்தடம் மின்மயமாதலுக்கான ஆணையை விரைந்து பெற்றுத் தந்திடுமாறு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, உபதலைவர் ராஜேந்திர ராவ், செயலர் கிருஷ்ணன், இணை செயலர் செந்தில் ஆறுமுகம், செய்தி தொடர்பாளர் ராமன் , பொருளாளர் சுந்தரம் மற்றும் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் வேண்டுகோள் கடிதங்களை அனுப்பி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் வளர்ச்சி பெற புனலூர் செங்கோட்டை ரயில் தடம் மின்மயமாதல் மிக அவசியம். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ரயில்வே அமைச்சரிடம் பேசி விரைவில் இதற்கான ஆணை பெற்றுத் தர வேண்டும் என தென்காசி மாவட்ட மக்களின் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, செயலாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில், நள்ளிரவுக்கு சற்று முன் திருநெல்வேலியில் இருந்து பாலக்காட்டுக்கு புறப்படும் பாலருவி ரயில், தமிழக ரயில் நிலையங்களை நள்ளிரவு நேரத்தில் கடக்கிறது. அதேபோல மாலையில் பாலக்காட்டிலிருந்து திருநெல்வேலிக்கு புறப்படும் ரயிலும் நள்ளிரவு நேரத்தில் தமிழக ரயில் நிலையங்களைக் கடக்கிறது. மக்கள் நலன் கருதி திருநெல்வேலியில் இருந்தும், பாலக்காட்டில் இருந்தும் காலை 7 மணிக்கு புறப்படும் வகையில் பகல் நேர ரயில்களாக மாற்ற வேண்டும்… என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.