கட்டுரை: – கமலா முரளி
”நிகரென்று கொட்டு முரசே ! இந்த
நீணிலம் வாழ்பவெரலாம் !- என்றார் மகாகவி பாரதி !
அத்தகைய, எல்லோரும் சரிநிகர் சமானம் எனும் நிகரில்லா உயரிய நிலை வரவேண்டுமெனில், அடிமைத்தனம், கீழ்மை நிலைகள் மறைய வேண்டும்.அனைவருக்கும் சமமான உரிமைகள் வேண்டும். உலகில் எந்த ஒரு மனிதனுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைத்தலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் சர்வதேச மனித உரிமைகள் நாள் !
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 நாள் சர்வதேச மனித உரிமைகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ம் நாள் தான் ஐ.நா. சபை “சர்வதேச மனித உரிமைகள் அறிக்கை ( Universal Declaration of Human Rights – UDHR ) ஆவணத்தைப் பிரகடனப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், 1950 ஆம் ஆண்டில், ஐ.நா பொது சபையில்,சர்வ தேச மனித உரிமைகள் நாள் குறித்த தீர்மானத்தின் படி (423 V ) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 நாள் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
வரலாறு
இரண்டாம் உலகப் போருக்குப் பின், 1945 ல்,ஐ.நா சபை உருவானதை அறிவோம். அடுத்த ஆண்டில், மனித உரிமை ஆணையம் ( Commision for Human Rights ) ஐ.நா சபையால் அமைக்கப்பட்டது. பல்வேறு இன, மொழி, மத, அரசியல் பிரதிநிதித்துவத்துடன் அமைந்த அக்குழு, மனித உரிமைகள் பிரகடன அறிக்கை தயாரிக்கும் குழுவை, ரூஸ்வெல்ட் அவர்கள் தலைமையில், 1947 ஆம் ஆண்டு அமைத்தது. இக்குழு முப்பது அடிப்படை உரிமைகளைப் பட்டியலிட்டது.
- சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் கௌரவத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள்.
- ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.
- சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.
- யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.
- சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
- சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை
- பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.
- ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
- சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.
- நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை
- குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.
- தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
- ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.
- ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.
- ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.
- எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை.
- சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை.
- சிந்தனைச் சுதந்திர, மனச்சாட்சிச் சுதந்திர, மதச் சுதந்திர உரிமை.
- கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு.
- கூட்டங்களில் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக உரிமை
- அரசியல் உரிமை – சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
- சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை
- ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்ய உரிமை.
- இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.
- ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் ,வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.
- அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை போன்ற வாழ வழியில்லாச் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை
- தாய்மை நிலை, குழந்தைப் பருவம் போன்ற விசேஷ கவனிப்பு தேவையான நேரத்தில் உதவி பெற உரிமை.
- ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமை
- சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கு உரிமை
- மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபெறும் உரிமை.
இந்த சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் ஐ.நா. சபையில் , 58 உறுப்பு நாடுகளில், 48 நாடுகள் வாக்கு பெற்று, ( 8 நாடுகள் சபைக்கு வரவில்லை, இரு நாடுகள் வாக்கே இடவில்லை ) தீர்மானமாக நிறைவேறியது.
பல்வேறு உலக நாடுகளும், தத்தமது நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்காத வகையிலும், மனித அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டங்களை நிறைவேற்றின. மனித நல உரிமை ஆணையங்கள் அமைக்கப்பட்டன.
டிஸம்பர் 10ம் நாள், மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா. பொது சபையில் 1950 ஆம் ஆண்டு நிறைவேறியது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஐ.நா.சபையால் வழங்கப்படும் ”மனித உரிமை சேவைக்கான விருது, சர்வதேச மனித உரிமைகள் தினம் அன்று வழங்கப்படுகிறது.உலக அமைதிக்கான நோபல் பரிசும் மனித உரிமைகள் தினத்தன்று வழங்கப்படுகிறது.
உலக அளவில், மனித உரிமை விழிப்புணர்வு பேரணிகளும், கருத்தரங்குகளும் நடத்தப் பெறுகின்றன.
”சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர் சுததிரமாக வாழும் உரிமை கிடைக்கப் பெற்றுள்ளனர்” என்ற முதல் வரைவுச்சட்டமே இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.
“வாழு ! வாழ விடு “ என்ற தத்துவத்தை உணர்ந்து, சம வாய்ப்புகள் என்பது அவரவர் உரிமை என்பதையும் உணர்ந்து, ஒன்றுபட்டு வாழ்வோம் !
“மனிதர் நோக, மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி இல்லை” எனும் நிலையை உருவாக்குவோம் !