திருப்புகழ்க் கதைகள் 225
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
சுருளளக பார – பழநி
நின்னொடும் எழுவர் ஆனோம்
விபீஷணன் சரணடைய வந்தபோது இராமன் தன் நண்பர்களான சுக்ரீவன், ஜாம்பவான் ஆகியோரிடத்து கருத்து கேட்கிறார். அவர்கள் அனைவரும் விபீஷணனை ஏற்க வேண்டாம் என உரைக்கின்றனர். இராமன் அனுமனிடத்தும் கருத்து கேட்கிறார். அப்போது அனுமன்
உள்ளத்தினுள்ளதை உரையின் முத்துற
மெள்ளத்தம் முகங்கள் விளம்புமாதலால்
கள்ளத்தின் விளைவெலாங் கருத்திலாமிருள்
பள்ளத்தினன்றியே வெளியிற் பல்குமோ.
இராகவா தாங்கள் அறியாதது எதுவும் இல்லை. எங்களுக்கு ஒரு மதிப்பு கொடுத்து விசாரிக்கிறாய் என்பதால் சொல்கிறோம். கண்டவுடன் ஒருவரைப் பற்றி அபிப்பிராயம் நாமே எற்படுத்திக் கொள்வது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. காலம் கடந்து இந்த விபீஷணன் வந்திருக்கிறான் என்று ஒரு வாதம். இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், இந்த தேச காலமும், அவ்வப்போழுது மாறும். மனிதனுக்கு மனிதன் குண தோஷங்கள் மாறுவது போல மாறிக் கொண்டே இருக்கும். இராவணனிடத்தில் துர்குணம் கண்டு, தங்கள் சக்தியையும் அறிந்து கொண்டு, இப்பொழுது வந்திருப்பது அவன் புத்திசாலித்தனத்தைத்தான் காட்டுகிறது. நல்ல எண்ணத்தோடு, நம்பிக்கையோடு வருபவனை அனாவசியமாக சந்தேகக் கண் கொண்டு பார்த்து நாமே நஷ்டமடைவோம்.
மற்றவர்களுடைய மனோ பாவத்தை சட்டென்று நாம் தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான செயலும் அல்ல. (உள்ளத்தினுள்ளதை உரையின் முத்துற மெள்ளத்தம் முகங்கள் விளம்புமாதலால் – Face is the index of the mind) இவன் முகமும் ஒளிமயமாக இருக்கிறது. கபடு உடையவனாகத் தெரியவில்லை. கெட்டவனாக இருந்தால், நேருக்கு நேர் நிற்க மாட்டான். இவன் சொல்லும் தீயதாகத் தெரியவில்லை. அதனால் எனக்கு இவனுடைய நல்லெண்ணத்தில் சந்தேகம் இல்லை.
மறைத்து வைத்துக் கொண்டாலும் ஒருவனது உடல் வாகும், முழுவதும் மறைந்து விடாது. உள் மனதின் பாவனைகளை அரசர்களின் நடையுடை பாவனைகள் கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடும். சரியான தேச, காலம் அறிந்து தான் வந்திருக்கிறான். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இவனை நம் பக்கம் எற்றுக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.
நான் சொன்னதை ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதோ, தங்கள் இஷ்டம். புத்திசாலிகளின் சிறந்தவனே, உங்கள் சொல் தான் பிரமாணம் என்று முடித்தான். அனுமன் சொல்லின் செல்வன் அல்லவா. வாயு குமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த இராமர், தன் மனதில் ஏற்கனவே தீர்மானித்துக் கொண்டு விட்டாலும், மற்றவர்கள் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொள்ளும் பொருட்டு கேட்டுத் தெரிந்து கொண்ட பின், தன் எண்ணத்தைச் சொல்வதாக.கம்பரின் அற்புதமான இந்தப்பாடல் வருகிறது..
இடைந்தவர்க் கபயம் யாமென் றிரந்தவர்க் கெறிநீர் வேலை
கடைந்தவர்க் காகி ஆலம் உண்டவர்க் கண்டி லீரோ
உடைந்தவர்க் குதவா னாயின் உள்ளதொன் றீயா னாயின்
அடைந்தவர்க் கருளா னாயின் அறமென்னாம் ஆண்மை என்னாம்
யாராயினும், அடைக்கலம் என்று சொல்லிக் கொண்டு வந்தால் எப்பொழுதும் கை விட மாட்டேன். அவனிடம் குறை இருந்தால் கூட பொருட்படுத்த மாட்டேன். அடைக்கலம் என அண்டி வந்தவனைக் காப்பாற்றுவது தான் தர்மம். புகழும் (சொர்க்கம்) நல்ல கதியும் தரக் கூடியது. இதனால் நம் நிலை மேன்மை பெறுமேயன்றி குறையாது. சுக்ரீவா, வந்திருப்பது, விபீஷணன் தானா அல்லது இராவணனாகவே இருந்தாலும் அடைக்கலம் தர சித்தமாக இருக்கிறேன் ஆகவே அவரை நீயே அழைத்து வா”என்றார்.
இராமரின் இந்த பேச்சைக் கேட்டு, வானர வீரனான சுக்ரீவன், விபீஷணனை அழைத்து வருகிறான். வருகின்ற விபீஷணன் இராமனைப் பார்க்கிறான். இதனை அருணாசலக் கவிராயர் – கை மாமுடி மேல் வைத்துக்கொண்டான் என்று தன்னுடைய பாடலில் பாடுகிறார். விபீடணைப் பார்த்த ராமர்,
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு:பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்:எம்முறை அன்பின் வந்த
அகனமர்க் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்!
புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை
என்கிறார். விபீடணனுக்கு அண்ணல் மீதான பக்தி உன்னதமானது.