திருப்பூர் நகைக்கடையில் நள்ளிரவில் 375 பவுன் நகைகள் மற்றும் 9கிலோ வெள்ளி நகைகள் ரூ.25 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என்.காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் யூனியன் மில் ரோடு பகுதியில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார்.
நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் ஜெயகுமார் கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்ததுடன் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நகைகள்- வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 375 பவுன் நகைகள் மற்றும் 9கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை போயிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்களின் அடையாளத்தை காண கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் மாநகர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
![திருப்பூரில் நகை கடையில் 375பவுன் நகை,9கிலோ வெள்ளி,ரூ25லட்சம் கொள்ளை 1 images 19 1](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/images-19-1.jpeg)