மதுரை கோவில் பாரம்பரிய கோவிலாக உலக அங்கீகாரம் பெற்று பெருமிதத்தை அளித்திருக்கும் நிலையில், அதற்கு திருஷ்டி படுவது போல், கடந்த 2ம் தேதி இரவு ஒரு தீவிபத்து நிகழ்ந்தது. இதற்கு, அங்கே கடை வைத்திருந்த யாரோ ஒருவர் திருஷ்டி சுற்றிப் போட்டது காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வளாகத்தில் உள்ள ஒரு கடையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கேஇருந்த 50 கடைகள் எரிந்து நாசமாகின. கிழக்குப் பகுதியில் உள்ள வசந்த மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. இங்குள்ள மாடங்களில் இருந்த புறாக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் கருகி உயிரிழந்தன.
புறாக்கள் அங்குமிங்கும் பறந்த போது, அவற்றின் இறக்கையில் பட்டு எரிந்த தீயினால் தீ மேலும் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தீ பற்றியது எப்படி என்பது குறித்து போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது வழக்கம்போல் கடையை பூட்டும்போது அதன் உரிமையாளர் கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. எனவே போலீஸார் சம்பந்தப் பட்ட கடையை வைத்திருந்த அதன் உரிமையாளர் முருகபாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.