ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் முன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆஜராகியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இரண்டேமுக்கால்ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது.
சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் என 154 பேரிடம் ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ள நிலையில் சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட அப்பல்லோ டாக்டர்களிடம் மறு விசாரணை நடத்தியது. இவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை மேற்கொண்டது.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பெரும்பாலான நாட்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தவர்களில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவராவார்.
இதன்காரணமாக இந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த ஆணையம் ஏற்கனவே முடிவு செய்தது. விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஓ.பன்னீர் செல்வத்திற்கு பல முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், பல முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகாமல் இருந்தார்.
இதற்கிடையில், வழக்கு விசாரணை தொடர்பாக திங்கட்கிழமை இன்று ஆணையத்தின் முன் ஆஜராகும்படி ஆறுமுகசாமி ஆணையம் 9-வது முறையாக சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது .
எதற்காக ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது கூட தெரியாதுஎன ஓபிஎஸ் ஆணையம் முன்பு கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? எதன் அடிப்படையில் ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைப்பு என ஆறுமுகசாமி ஆணையம் பதில்கூறியது.
விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் கையெழுத்திட்டேன்.
ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22ல் எதனற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரியாது. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது சொந்த ஊரில் இருந்தேன்.என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்த சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்பது குறித்து எதுவும் எனக்கு தெரியாது.
மருத்துவமனையில் தலைமை செயலாளரிடமே கேட்டறிந்தேன் என ஒ.பி.எஸ் வாக்குமூலம் அளித்தார்.
அதேபோல், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் இன்று ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகியுள்ளார். அவரிடமும் விசாரணை நடைபெற்றது.