சென்னை:
சோடா பாட்டிலும் வீசத் தெரியும்; ஆனால் அறவழியில் அமைதியாகப் போராடுவோம் என்று, கவிஞர் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து திருச்செங்கோடு கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜீயரின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் வரும் 20ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.