ஐ.பி.எல் மே 19, 2022 – குஜராத் vs பெங்களூரு
- K.V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, ஐபிஎல்லின் 67ஆவது ஆட்டம் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே நடந்தது.
குஜராத அணியை (பாண்ட்யா 62, மில்லர் 34, சாஹா 31, ஹேசல்வுட் 2/39) பெங்களூரு அணி (170/2, கோலி 72, ட்யூ பிளேசிஸ் 44, மேக்ஸ்வெல் 40, ரஷீத் கான் 2/32) 8 விக்கட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீர்ர் ஷுப்மன் கில் மூன்றாவது ஓவரில், மூன்றாவது பந்தில் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
5.2 ஓவரில் மேத்யு வேட் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் விருத்திமான் சஹா (22 பந்துகளில் 31 ரன்), ஹார்திக் பாண்ட்யா (47 பந்துகளில் 62 ரன்), டேவிட் மில்லர் (25 பந்துகளில் 34 ரன்) ஆகியோர் நன்றாக விளையாடியதால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 168 ரன் எடுத்தது.
அடுத்து விளையாட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலியும் டியூ பிளேசிஸ் இருவரும் பெங்களூரு அணியின் கடைசி ஆட்டமான இன்றைய ஆட்டத்தில் அவர்கள் இருவரும் ஏன் உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்களாக கருதப்படுகின்றனர் என நிரூபித்தனர்.
டியூ பிளேசிஸ் 14.3 ஓவரில் ஆட்டமிழந்தார். 38 பந்துகளில் 44 ரன் எடுத்தார். விராட் கோலி 16.4ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்; 54 பந்துகளில் 73 ரன் அடித்தார். அவர் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 146.
அதன் பின்னர் வெற்றிக்குத் தேவைப்பட்ட 23 ரன்களை அடுத்த 12 பந்துகளில் மேக்ஸ்வெல் எடுத்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். 18 பந்துகளில் மேக்ஸ்வெல் 40 ரன் எடுத்தார்.
லீக் ஆட்டத்தில் தங்களது இறுதி ஆட்டத்தை ஆடியுள்ள குஜராத் அணி 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இரண்டு ஆட்டங்கள் ராஜஸ்தான் vs சென்னை, மும்பை vs டெல்லி அணிகளுக்கிடையே நடக்கின்றன.
இந்தப் போட்டிகள் நாலாவது இடத்தைப் பிடிக்கப்போகிற அணி எது என முடிவு செய்யும்.