1.சுதந்திரப் போராட்டத்தில் என் குடும்பத்தின் பங்கு
- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (ஆசிரியர், கலைமகள்)
என்னுடைய தாத்தா திருமங்கலம் சுப்பையா அய்யர் என்று அழைக்கப்படும் எஸ்.சங்கர சுப்பிரமணிய அய்யர் (தாத்தாவின் பெயர்தான் எனக்கு இடப்பட்டுள்ளது.)திருமங்கலத்தில் காப்பி ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார்.1930-ஆம் ஆண்டு தொடக்கம் பல சுதந்திரப் போராட்ட வீரர்களோடு அவருக்குத் தொடர்பு இருந்தது.மிதவாதியான இவர் ஜெயிலுக்குப் போனதில்லை.சுபாஷ் சந்திர போஸ் மீதும் முத்துராமலிங்கத் தேவர் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவர்கள் தனது காப்பி ஹோட்டலில் உணவு அருந்த வந்தால் அவர்களிடம் பணம் வசூலிக்க மாட்டார்.
சங்கு சுப்பிரமணிம் அவர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் சங்கு என்னும் பத்திரிகையை நடத்தி வந்தார்.மாதம் மும்முறை வெளியான இந்தப் பத்திரிகையை தான் வாங்கியதோடு தனது நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுப்பார்.சங்கு பத்திரிகிகுநிறைய சந்தாதாரர்களை மதுரை திருமங்கலம் ஏரியாவில் உருவாக்கினார்.அதோடு மட்டுமல்லாமல் தனவந்தர்க்ளிடமிருந்தும்,கொடையாளிகளிடமிருந்தும் 29,30 என்று நன்கொடை வசூலித்து அந்தத் தொகையை சங்கு பத்திரிகைக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதோடு கொடுக்கப்பட்ட தொகைக்கு ஏற்றவாறு சந்ஹாரர்கள் பெயர்களையும் கொடுத்தார்.சுருங்கச் சொல்வதானால் Ve Subscription என்னும் முறையை தமிழ் பத்திரிகை உலகில் அன்றே கையாண்டார் என் தாத்தா திருமங்கலம் சுப்பையா அய்யர்.
எங்களது வீட்டு மாடியில் சங்கு பத்திரிகைகள் பல இருப்பதை பிற்காலத்தில் நானே பார்த்திருக்கிறேன்.
திருமங்கலம் காப்பி ஹோட்டலை தன் உறவினர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டு தனது சொந்த ஊரான கீழாம்பூருக்கு 1936- ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்து சேர்ந்தார்.கீழாம்பூரில் ரயில்வே லைனுக்கு மேல் புறத்தில் உள்ள மேலாம்பூரில் தான் சம்பாதித்த பணத்தில் விவசாய நிலங்களையும்,தோட்டம் ஒன்றையும் விலைக்கு வாங்கினார்.
தன்னுடைய தோட்டத்தில் தறிச்சாலை ஒன்றை அமைத்தார்.அதே போன்று கீழாம்பூரில் தான் வாழ்ந்த வீட்டின் பின்புறத்திலும் தறி ஒன்றை ஏற்படுத்தினார்.
தனது தோட்டத்தில் தறிச்சாலையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்.அதோடு மட்டுமல்லாமல் பட்டியல் இனத்தவர்கள் வசதியாகத் தங்குவதற்கு தோட்டத்தின் பின்புறத்தில் குடில்களையும் அமைத்துக் கொடுத்தார்,இந்த முயற்சிகளுக்கெல்லாம் என்னுடைய பாட்டி வழி கொள்ளுத் தாத்தா விஸ்வநாத அய்யர் ஆலோசனைகள் கூறியதோடு விவசாயத் துறையில் பல நவீன முயற்சிகளை அவரும் முன்னெடுத்தார்.
கீழாம்பூரில் தன்னுடைய தறிச்சாலையில் தானே வேஷ்டியும் நெசவு செய்திருக்கிறார்.ராட்டையிலும்,தக்ளியிலும் நூல் நூற்றிருக்கிறார்.அந்நியத் துணி பகிஷ்கரிப்பில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார் என் தாத்தா.
ஒருமுறை அவரே நெய்த கதரை விற்கப்போனபோதுதான் நெய்த தறியில் உள்ள சுய தயாரிப்புகளை விற்கப்போனபோது)32-ரூபாய் கிடைத்தது.
இந்தப் பணம் முழுவதையும் விடுதலைப் போராட்ட நிதிக்காக அக்காலத்தில் கொடுத்தார். 25 ரூபாயை போராட்ட நிதிக்காக வரவு வைக்கச் சொன்னார்.மீதிப் பணம் 7 ரூபாயை வக்கீல்களுக்கு என்று தனி நிதிபிரிவு ஏற்படுத்த வேண்டும் அதில் இதைச் சேர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைதானால் வழக்கு நடத்தவும் ஜாமீனில் அவர்களைக் கொண்டுவரவும் தனி நிதியம் வேண்டும் என்கிற எண்ணம் திருமங்கலம் சுப்பையா அய்யருக்கு இருந்தது.
இந்தச் சம்பவத்தை என் சித்தப்பா (அய்யாசாமி என்கின்ற ராமசுப்பிரமணியன் மூலமாகத்தான் பல விஷயங்களை நான் கற்றவன்.) வீட்டில் வைத்து அம்பாசமுத்திரம் அட்வகேட் திரு முத்துராமனிடம் நெல்லைத் தியாகி கி.ஹரிஹர சுப்பிரமணியன் தெரிவித்தார்.நான் வியந்து போனேன்.அட்வகேட் முத்துராமன் அவர்களிடமிருந்துதான் கீழாம்பூரில் என் சித்தப்பா வீடு வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
1946-ஆம் ஆண்டு சனிக்கிழமை ஆகஸ்ட்31- ஆம் தேதி திருமங்கலம் சுப்பையா அய்யர் மற்றும் காசிவிஸ்வநாத அய்யர் இருவரும் கோவந்குறிச்சிக்கு அடுத்த பகுதியில் உள்ள மேலாம்பூர் கிராமத்தில் சுதந்திர உணர்வை கீழ்த்தட்டு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அமைதியான முறையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.காலையில் 9-மணிக்குக் கொடி ஏற்றுவது என்று முடிவானது இந்த விஷயத்தை கிராம மக்கள் எல்லோரிடமும் தெரிவித்து கூட்டம் சேர்த்தார்கள்.40-குடும்பங்களைச் சிறந்த சுமார் 100- பேர் கலந்துகொண்டார்கள்.
சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்த நிகழ்ச்சி என்பதால் அப்போது அன்றைய பிரிட்டிஷ் அரசால் அனுமதி வழங்கப்படவில்லை.கிராம முன்சீப் கிருஷ்ணையர் மற்றும் தலையாரிகள் திருமங்கலம் சுப்பையா அய்யர் அவர்களிடமும் காசி விஸ்வநாத அய்யர் அவர்களிடமும் இணக்கமாகப் பேசி கொடி ஏற்றக்கூடாது என்ற விஷயத்தைத் தெரிவித்தார்கள்.இந்த வேண்டுகோளை இருவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
அதே சமயத்தில் தாங்கள் நட்டு வைத்த கம்பத்தில் வெள்ளை நிறத்தில் கொடி ஒன்றை ஏற்றப் போவதாகவும் அது அன்னக்கொடியாக இருக்கும் என்றும் திருமங்கலம் சுப்பையா அய்யர் கிராம முன்சீப்பிடம் தெரிவித்தார்.மேலாம்பூரில் பறந்த முதல் அன்னக்கொடியாக அது இருக்கும் என்று நினைக்கிறேன்.
வெள்ளை நிறத்தில் கதரில் கொடி தயாரித்து உடனடியாக அதை ஏற்றினார்கள்.காப்பி ஹோட்டல் நடத்திய அனுபவத்தில் நூறு பேருக்குத் தன்னுடைய தோட்டத்தில் வைத்து உணவு தயாரித்து கூடியிருந்த 40-குடும்ப மக்களுக்கு (பட்டியல் இனத்தைச் சேர்ந்த) அன்று உணவு வழங்கப்பட்டது.
சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு பாரத தேசத்திற்கு ஆகஸ்டு 15- ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது.அதற்கு அடுத்த நாள் ஆகஸ்டு 16- ஆம் தேதி மறுபடியும் அதே இடத்தில் கோடிக் கம்பத்தை நட்டு நம்முடைய மூவர்ணக் கொடியை அங்கே பறக்க விட்டார்கள்.ஆர்பாட்டமில்லாமல் அமைதியான நிகழ்வு அது.அன்றும் எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது.இந்தக் கொடிக் கம்பத்தைச் சுற்றிய பகுதிக்கு தன்னுடைய உறவினர் காசி விஸ்வநாதன் பெயரை வைத்தார்.இன்று அப்பகுதி மேலாம்பூரில் காசி விஸ்வநாதபுரம் என்று அழைக்கப்படுகிறது.
கீழாம்பூர் கிராமத்தில் இருந்த கிராம முன்சீப் கிட்டு என்கிற ராமகிருஷ்ண அய்யர் இந்த விவரத்தை என்னிடமே தெரிவித்தது உண்டு.அதே போல எங்களது தோட்டத்திலும் விவசாய நிலங்களிலும்,தரிச்சாலையிலும் வேலை செய்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஸ்ரீமான் பச்சப் பெருமாள் அவர்களும் இந்த விபரத்தை உணர்ச்சி பொங்க என்னிடம் தெரிவித்தது உண்டு. இந்தப் பச்சப் பெருமாளின் மருமகள் இன்று (2022) கருத்தபிள்ளையூர் பஞ்சாயத்தில் தலைவியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.இன்று பல பட்டியல் இனத் தலைவர்கள் மேலாம்பூர்,கருத்தபிள்ளையூர்,கீழாம்பூர் போன்ற பகுதிகளில் உருவாகியிருக்கிறார்கள்.என்றால் அதற்கு என்னுடைய கொள்ளுத் தாத்தா விஸ்வநாத அய்யரும் என்னுடைய தாத்தா திருமங்கலம் சுப்பையா அய்யர் காரண கர்த்தாவாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து என் மனம் மகிழ்ச்சி அடைகிறது.
இந்த நூலை என்னுடைய குடும்பத்தில் சுதந்திரப் போராட்டத்திற்காக மறைமுகமாகவும் நேரடியாகவும் குரல் கொடுத்த என் மூதாதையர்களுக்கு, குறிப்பாக என் தாத்தா திருமங்கலம் சுப்பையா அய்யர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.